தீவிரவாதி மசூத் அசாரை குடும்பத்தோடு காணவில்லை.. பாகிஸ்தான் பரபரப்பு தகவல்
இஸ்லாமாபாத்: இந்தியாவில் மும்பை தாக்குதல் புல்வாமா தாக்குதல் உள்பட பல்வேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் மற்றும் அவரது குடும்பத்தினரை காணவில்லையாம். இப்படி சொல்லியிருப்பது பாகிஸ்தான் அரசு. அது யாரிடம் தெரியுமா.. சர்வதேச தீவிரவாத நிதி தடுப்பு அமைப்பிடம் சொல்லியிருக்கிறது
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி மசூத் அசார், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவன் ஆவான். இவன் தான் பல்வேறு தீவிரவாத சம்பங்களுக்கு முக்கிய காரணம் என இந்தியா சொல்லி வருகிறது.
கடந்த 2008 ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் மற்றும் 2019ம் ஆண்டு பிப்ரவரி நடந்த புல்வாமா தாக்குதல் ஆகியவற்றில் மூளையாக செயல்பட்ட இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான்.
சர்வதேச தீவிரவாதி
தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் மசூத் அசாரை கடந்த மே 1ல் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது. இந்நிலையில், தீவிராவதிகளுக்கு நிதி செல்வதை தடுக்கும் சர்வதேச அமைப்பான எப்.ஏ.டி.எப் பாகிஸ்தானை தீவிரவாதிகளுக்கு நிதி செல்வதை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என சாம்பல் பட்டியலில் சேர்த்தது. விரைவில் நடைபெற உள்ள கூட்டத்தில் கருப்பு பட்டியலில் சேர்க்க சீனாவின் ஆதரவு காரணமாக வாய்ப்பில்லை என்றாலும் சர்வதேச நெருக்குதல்கள் உள்ளது.
கணக்குகள் முடக்கம்
இதனால் நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக சொல்லி சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. யு.என். குழுக்களால் பட்டியலிடப்பட்ட தனிநபர்கள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்களின் 5,500 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன என்று பாகிஸ்தான் கூறியுள்ளது, சிலரை கைது செய்து சிறையில் வைத்துள்ளது. ஹபீஸ் சயீத்துக்கு 11 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
16 தீவிரவாதிகள்
இந்நிலையில் இந்நிலையில், சர்வதேச தீவிரவாத நிதி தடுப்பு அமைப்பின் சார்பில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான், தீவிரவாதி மசூத் அசாரையும் அவரது குடும்பத்தினரையும் காணவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் நாட்டில் 16 சர்வதேச பயங்கரவாதிகள் இருந்தனர் என்றும் அவர்களில் 7 பேர் இறந்துவிட்டனர் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஹபீஸ் சயீது
மற்ற 9 பேரில் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபிஸ் சயீது, அல்-கொய்தாவிற்கு நிதி வழங்கிய அப்துல் ரகுமான் உள்ளிட்ட 7 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட நிதி மற்றும் பயண கட்டுபாடுகளில் இருந்து விலக்கு அளிக்க கோரி ஐ.நா. அமைப்பிடம் விண்ணப்பித்து உள்ளதாகவும் பாகிஸ்தான் கடந்த முறை நடந்தமாநாட்டில் கூறியிருக்கிறது. எனினும் மசூத் அசாரை காணவில்லை என பாகிஸ்தான் சொல்வது உண்மையா என்பது பெரும் கேள்விக்குறிதான்.