பயங்கரவாதி மசூத் அசாரை சிறையில் இருந்து ரகசியமாக விடுதலை செய்தது பாக்.? மிகப் பெரிய நாசவேலைக்கு சதி?
இஸ்லாமாபாத்: சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான் சிறையில் இருந்து ரகசியமாக விடுதலை செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை தாக்குதல் வழக்கில் முதன்மை குற்றவாளியான மவுலானா மசூத் அசார், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜமா உத் தவா மற்றும் ஜெய்ஷியே முகமது ஆகிய பயங்கரவாத இயக்கங்களின் தலைவர். அண்மையில் ஐ.நா.சபையால் சர்வதேச பயங்கரவாதி என பிரகடனம் செய்யப்பட்டார் மசூத் அசார்.
இதனைத் தொடர்ந்து திடீரென மசூத் அசாரை ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட சில வழக்குகளில் கைது செய்ததாக பாகிஸ்தான் கூறியது. தற்போது ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் பதற்றமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி வருகிறது.
'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ
நாட்டின் எல்லைப் பகுதிகளில் மிகப் பெரிய நாசவேலைகளை நடத்த பாகிஸ்தான் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ராஜஸ்தான் எல்லையில் திடீரென படைகளை பாகிஸ்தான் குவித்துள்ளது.
அப்பகுதியில் தீவிரவாதிகளை ஊடுருவ வைத்து தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தக் கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில்தான் பாகிஸ்தான் சிறையில் இருந்து பயங்கரவாதி மசூத் அசாத் ரகசியமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மசூத் அசார் மூலமாக எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் நாசவேலைகளை மேற்கொள்ளக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் சகோதரர்களுக்காக நாங்கள் எந்த தியாகத்துக்கும் தயார் என பாகிஸ்தான் கொக்கரித்து வரும் நிலையில் மசூத் அசார் விடுவிக்கப்பட்டதாக வெளியானதாக தகவல் இருநாடுகளிடையேயான உறவில் மேலும் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.