5 நட்சத்திர விடுதியில் தீவிரவாதிகள் அட்டாக்... பாகிஸ்தானில் பயங்கரம்
பலுசிஸ்தான்: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில், தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.
கவாதர் பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில், 3 தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்து நட்சத்திர விடுதியில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என தெரிகிறது. பாதுகாப்பு படையினர் அந்த ஹோட்டலை சுற்றிவளைத்துள்ளனர்.
கவாதர் நகரில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகம் அருகே தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இந்திய பெருங்கடலையும் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைப்பதற்கான துறைமுகத்தை சீனா கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திர ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தும் சத்தம் கேட்டதாகவும், ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்கள் அலறல் சத்தம் கேட்டதாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறியதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் போஸ் கிளிப்டன் பகுதியில் சீன தூதரகத்துக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கராச்சியில் சீன தூதரகத்தில் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்துக்கு 'பலுசிஸ்தான் விடுதலை படை' என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்தநிலையில், மீண்டும் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில், தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.