மோடியின் 'மேக் இன் இந்தியா' வுக்கு நோஸ்கட் - சீனாவில் கால்பதிக்கும் "டெஸ்லா" எலக்ட்ரிக் சொகுசு கார்
கலிபோர்னியா: டெஸ்லா எலக்ட்ரிக் சொகுசு கார் நிறுவனம் சீனாவில் புதிய ஆலைகளை அமைக்க உள்ளதாக அறிவித்திருப்பது பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அமெரிக்கா சென்ற போது கலிபோர்னியாவின் சிலிக்கான் வேலிக்கும் பயணம் மேற்கொண்டார். அடோப், கூகுள், ஃபேஸ்புக் தலைமை அலுவலகங்களுக்கு சென்ற அவர் உலகின் முன்னணி எலக்ட்ரிக் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்டாவையும் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக டெஸ்டாவின் புதிய ஆலைகள் இந்தியாவிலும் அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து ஊடகங்களும் எழுதித் தள்ளின.
ஆனால் தற்போது டெஸ்லா மோட்டார் நிறுவனத்தின் தலைவர் எலோன் முஸ்க், தங்களது மாடல் 3 எலக்ட்ரிக் கார் தயாரிப்பு தொழிற்சாலையை சீனாவில் அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த தொழிற்சாலையில் 2017ஆம் ஆண்டு முதல் கார் உற்பத்தி தொடங்க உள்ளது.
இத்தனைக்கும் டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றுவது இந்திய வம்சாவளி என்ஜினியர்கள்தான்... ஆனாலும் டெஸ்லா கார் தயாரிப்பு தொழிற்சாலையை இந்தியாவுக்குள் கொண்டுவருவதில் மோடி அரசு தோல்வியையே தழுவியிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஏற்கெனவே ஃபேஸ்புக், கூகுள் நிறுவன தலைமை அலுவலகங்களுக்கு பிரதமர் பயணம் மேற்கொண்டு இந்தியாவில் பிராட் பேண்ட் வசதியை அதிகரிப்பதில் ஒத்துழைக்க கோரி இருந்தார்... ஆனால் அதே நேரத்தில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீரத்திலும் குஜராத்திலும் வெவ்வேறு காரணங்களால் ஒட்டுமொத்த இணைய இணைப்புகளே துண்டிக்கப்பட்டன.. சமூக வலைதளங்களும் முடக்கப்படுகிற நிலைமையும் நீடிக்கிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.