அமெரிக்க கார்ட்டூன் மாநாட்டில் திடீர் தாக்குதல்... 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது போலீஸ்!
வாஷிங்டன் : அமெரிக்காவில் நடந்த கார்டூன் மாநாட்டில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய இரண்டு பேரைப் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் கார்லேண்டு பகுதியில் கார்ட்டூன் மாநாடு ஒன்று நடைபெற்றது. இஸ்லாமுக்கு எதிரான அமைப்பு ஒன்று இதை நடத்தியது. இதில் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்கள் இடம் பெற்றிருந்தன. இதில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் கார்ட்டூனுக்கு ரூ.6 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்து.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் இந்த மாநாட்டில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாநாடு நடைபெற்ற கர்டிஸ் கல்வெல் மையத்தில் நுழைந்த துப்பாக்கி ஏந்திய 2 மர்ம மனிதர்கள், கண் இமைக்கும் நேரத்தில் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினர். இதில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய 2 மர்ம நபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் காயம் அடைந்தார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து கார்ட்டூன் மாநாடு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
ஏற்கனவே நபிகள் நாயகம் குறித்து கார்ட்டூன் போட்டு பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் பாரீஸின் சார்லி ஹெப்டு பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து சிலர் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம். நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் போட்டதன் காரணமாக இந்த தாக்குதலுக்குள்ளானது சார்லி ஹெப்டு