நாங்க நல்லாருக்கோம்.. எல்லோருக்கும் ரொம்ப நன்றி.. உருக வைத்த தாய் சிறுவர்களின் வீடியோ பேச்சு
தாங்கள் பத்திரமாக இருப்பதாக மருத்துவமனையிலிருந்து தாய்லாந்து சிறுவர்கள் வீடியோ காட்சிகளை அனுப்பியுள்ளனர்.
பாங்காங்: தாய்லாந்து குகையில் சிக்கி மீட்கப்பட்ட சிறுவர்கள் தாங்கள் பத்திரமாக இருப்பதாக மருத்துவமனையிலிருந்து தாய்லாந்து சிறுவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
தாய்லாந்தில் உள்ளது தாம்லுவாங் குகை. இது 10 கி.மீ. நீளம் கொண்டது. இங்கு பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தாய்லாந்து கால்பந்து இளம் வீரர்கள் அவர்களது கோச் ஒருவருடன் ஜூன் 23- ஆம் தேதி சென்றனர்.
அப்போது விழா முடித்துவிட்டு திரும்பும் போது அங்கு கனமழை பெய்ததால் வெள்ளநீர் குகைக்குள் புகுந்தது. இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் போனது. இதையடுத்து கடந்த 8 -ஆம் தேதி பிரத்யேக ஸ்கூபா டைவிங் வீரர்கள் குகைக்கு தங்கள் உயிரை பணயம் வைத்து சென்றனர்.
கடந்த 3 நாட்களாக, அதாவது 10-ஆம் தேதி வாக்கில் 12 சிறுவர்கள், ஒரு பயிற்சியாளர் என அனைவரும் மீட்கப்பட்டனர். இந்நிலையில் இந்த சிறுவர்கள் அனைவரும் வடக்கு தாய்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாகவும் தங்களை பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்றும் தங்களை மீட்ட அதிகாரிகள் நலம்விரும்பிகளுக்கு நன்றி என்று ஒவ்வொரு சிறுவரும் பெட்டில் இருந்து கூறும் வீடியோ காட்சிகளை சுகாதார துறை அதிகாரிகள் வெளியிட்டனர்.