ஆஸ்திரேலியா: சிட்னி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொண்டாட்டம்
சிட்னி: ஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னியில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப் பட்டது.
கடந்த வெள்ளியன்று சிட்னி மாநகரில் உள்ள மேஸ் ஹில் எனும் இடத்தில் உள்ள முருகன் கோவிலில், காலை 5.30 மணிக்கு மூலவர் முருகனுக்கு அபிஷேகம் இடம்பெற்றதனைத் தொடர்ந்து அடியார்கள் பாற்குடம் எடுத்து தமது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
காலை 7.00 மணிக்கு இரண்டாவது கால சந்திப் பூசையும் அதனைத் தொடர்ந்து முற்பகல் 10.30 மணிக்கு உற்சவருக்கான அபிசேகமும் நடைபெற்றது.
பிற்பகல் 12.00 மணிக்கு நடந்த உச்சிக்காலப் பூசையோடு பகல் திருவிழா நிறைவு பெற்றது.
மாலை 5.00 மணிக்கு சாயரட்சை பூசையும், அதைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு ஆறுமுகப் பெருமானுக்கு அபிஷேகம் இடம்பெற்றது. மாலை 7.00 மணிக்கு மாலைப் பூசையினைத் தொடர்ந்து 7.15 மணிக்கு சண்முகா அர்ச்சனை இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து 7.45 மணிக்கு இடம்பெற்ற வசந்த மண்டபப் பூசையினைத் தொடர்ந்து 8.00 மணியளவில் முருகப் பெருமான் தவில், நாதஸ்வர இசையுடன் உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்தார்.
இரவு 9.30 மணிக்கு அர்த்த சாமப் பூசையோடு தைப்பூச திருவிழா இனிதே நிறைவு பெற்றது.
இதேவேளையில் சிட்னி முருகன் கோயிலின் வருடாந்த மஹோற்சவ உற்சவம் எதிர்வரும் 16.03.2014 அன்று இடம்பெறவுள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் இடம்பெறும் மஹோற்சவ உற்சவ நிகழ்வில் 16.03.2014 அன்று தேர்த் திருவிழாவும் 17.03.2014 அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும் என சிட்னி முருகன் கோயிலின் சைவமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேற்கொண்டு இது குறித்தான விவரங்களுக்கு சிட்னி முருகன் இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்: www.sydneymurugan.org.au