உலக நாடுகளை உலுக்கி விட்ட தாய்லாந்து குகை.. சிறுவர்கள் சிக்கியது முதல் மீண்டது வரை!
தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் என அனைவரம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
பாங்காக்: தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த 23ஆம் தேதி 12 சிறுவர்கள் தங்களின் பயிற்சியாளருடன் தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக சென்றனர்.
அப்போது கனமழை கொட்டியதால் 10 கி.மீ. நீளம் உடைய குகையில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் சுற்றுலா சென்ற சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரால் குகையை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் தவித்தனர்.
குகைக்கு வெளியே சிறுவர்களின் பெற்றோர்கள் கண்ணீரும் கம்பளியுமாய் காத்திருந்தனர். அவர்களை மீட்பதற்கான பணிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் இறங்கினர். இந்நிலையில் 18 நாட்களுக்குப் பிறகு அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 18 நாட்களாக அவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?
ஜூன் 23 - தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். கனமழையால் குகைக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் மாணவர்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது.
சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்க தீவிரமாக திட்டம் வகுக்கப்பட்டது. முக்குளிப்பவர்கள் உதவியுடன் மீட்பு பணியை தொடங்கியது. சிறுவர்கள், பயிற்சியாளர் என 13 பேரும் நல்ல மன வலிமையுடனும், உடல் வலிமையுடனும் காணப்பட்டதால் அவர்களை மீட்க அதிரடியாய் திட்டமிட்டு, டி-டே என்ற ஆபரேஷன் தொடங்கப்பட்டது. சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்பதற்காக முக்குளிப்பு வீரர்கள் குகைக்குள் அனுப்பட்டனர்.
ஜூலை 2 பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டுபிடித்தனர்.
ஜூலை 6 - தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் உயிரிழந்தார்.
ஜூலை 8- காலை 10 மணியளவில் சென்ற அவர்கள் மாலை 5:45 மணியளவில் சிறார்களை வெளியே கொண்டுவந்தனர். அப்போது 4 சிறார்கள் வெளியே கொண்டு வரப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜூலை 9- இரண்டாம் கட்ட நடவடிக்கையின் போதும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
ஜூலை 10 - இன்றும் கூடுதல் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள், அப்போது பயிற்சியாளரையும், சிறவர்களையும் அவர்கள் வெளியே பத்திரமாக கொண்டு வந்தார்கள்.
மிகவும் குறுகிய குகைக்குள், சகதி கலந்த வெள்ள நீரில், ஆஜ்ஸிஜன் டேங்குகளுடன் பயணித்து பத்திரமாக மீட்டுள்ளனர், அவர்களுக்கு பல்வேறு தரப்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த குகையும் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.