13 பேர் அகப்பட்ட தாய்லாந்து குகை.. மியூசியமாக மாற்ற அரசு முடிவு
13 பேர் அகப்பட்ட தாய்லாந்து குகை தற்போது மியூசியமாக மாற்றப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பாங்காக்: 13 பேர் அகப்பட்ட தாய்லாந்து குகை தற்போது மியூசியமாக மாற்றப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தி தம் லுஅங் எனப்படும் தாய்லாந்தில் இருக்கும் குகைதான் இந்த மோசமான வரலாற்றை சுமந்து இருக்கிறது. இந்த குறுகலான குகைக்குள் 2 வாரம் முன்பு தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள்.விளையாட்டு சுற்றுலா சென்ற இவர்கள் கடந்த 17 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருந்தனர்.
பல போராட்டத்திற்கு பின் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு பணி முழு வெற்றி பெற்றுள்ளது. தாய்லாந்து குகையில் சிக்கியவர்களில் அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். குகையில் சிக்கிய 12 சிறுவர்கள், 1 பயிற்சியாளர் உட்பட அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.
சீல் வைக்கப்பட்டுள்ளது
மூன்று நாட்களாக மீட்பு பணி நடைபெற்றது. இந்த நிலையில் இந்த குகைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இனி இந்த குகைக்குள் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் இதுவும் ஒன்று என்ற பெயரை இது பெற்றுள்ளது. தற்போது மீட்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அருங்காட்சியகம்
இந்த நிலையில்தற்போது இந்த சீல் வைக்கும் முடிவை கைவிட்டு இருக்கிறார்கள். அதன்படி சீல் வைத்து அவ்வளவு பெரிய இயற்கையான இடத்தை கைவிட கூடாது என்பதால் அதை மியூசியமாக்க முடிவெடுத்து இருக்கிறார்கள். பல பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அழகான மியூசியமாக மாற்ற முடிவெடுத்து இருக்கிறார்கள்.
என்ன நடக்கும்
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த இடம் முழுக்க இந்த சிறுவர்கள் எப்படி மீட்கப்பட்டார்கள் என்ற குறிப்புகள் இருக்கும். அங்கு நடந்த சில முக்கியமான விஷயங்கள், திருப்பங்கள் குறித்த தகவல்கள் இருக்கும். அதேபோல் இது குறித்து உலக மக்கள் பேசிக்கொண்ட சில விஷயங்களும் இதில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பயன்
இதன் மூலம் அந்நாட்டின் வருவாய் பெருகும் என்று கூறப்படுகிறது.ஏற்கனவே அந்த இடம் பெரிய அளவில் முன்னேறாமல் இருக்கிறது. தற்போது இந்த இடத்தை மியூசியமாக மாற்றினால் நாட்டிற்கு அதிக வருவாய் கிடைக்கும். அதேபோல் அந்த பகுதியும் பெரிய அளவில் முன்னேறும் என்று கூறப்பட்டுள்ளது.