தாய்லாந்தில் பயங்கரம்.. 17 பேரை சரமாரியாக சுட்டு கொன்ற ராணுவ வீரர்.. பேஸ்புக்கில் லைவ் வேறு
பாங்காங்: தாய்லாந்து நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், ஷாப்பிங் மாலுக்குள் புகுந்து, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு 17 பேரை கொன்று குவித்துள்ளார். இந்த காட்சிகளை அவர் பேஸ்புக் லைவ் மூலமாக ஒளிபரப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் வடகிழக்கு நகரமான நகோன் ராட்சசிமாவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அந்த ராணுவ வீரர் பெயர் மேஜர் ஜக்ரபந்த் தோம்மா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் சுட்டதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதோடு, 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நபர் ராணுவ வாகனத்தை திருடி, தன்னைத்தானே புகைப்படங்களையும், வீடியோவையும் எடுத்து, பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
முந்தைய நாள் தனது பேஸ்புக் பக்கத்தில் "அனைவருக்கும் மரணம் தவிர்க்க முடியாதது" என்று எழுதிவைத்திருந்ததும் தற்போது தெரியவந்தது. லைவ் வீடியோவை தொடங்கி சுட்டபடியே, "நான் இதை கைவிட வேண்டுமா?" என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து பேஸ்புக் நிர்வாகத்திற்கு புகார்கள் பறந்ததால், அந்த பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது.
தலைநகர் பாங்காக்கிலிருந்து 250 கி.மீ (155 மைல்) தொலைவில் இந்த நகரம் உள்ளதாம். மால் மட்டுமின்றி, நகரின் வெவ்வேறு இடங்களில் இந்த ராணுவ வீரர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் கிசானா ஃபத்தானாச்சரோயன் செய்தியாளர்களுக்கு அனுப்பிய தகவலில் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கடைசியாக ஒரு ஷாப்பிங் சென்டருக்கு அருகில் இருந்தார், ஆனால், இதுவரை கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். "அவர் ஏன் இதைச் செய்தார் என்று எங்களுக்குத் தெரியவில்லை, மனநலம் பாதிக்கப்பட்டவர் போல தெரிகிறது" என்று பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கொங்க்சீப் தந்திரவானிட் கூறியுள்ளார்.