பதவி விலக மறுப்பு: அமைச்சரவைக் கூட்டத்தில் கதறியழுத தாய்லாந்து பிரதமர்!
பாங்காக்: தாம் பதவி விலகப் போவதில்லை என்று அமைச்சரவைக் கூட்டத்தில் கண்ணீர் கதறலுடன் தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் தமக்கு எதிரான போராட்டம் வலுத்ததை அடுத்து, பிரதமர் யிங்லக் ஷினவத்ரா நாடாளுமன்றத்தை அதிரடியாக கலைத்தார். 60 நாளில் தேர்தல் நடத்தப்படும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமராக யிங்லக் தொடர்ந்தாலும், அவர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர் பதவி விலகியே ஆக வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் பிரதமர் இல்லத்தின் அருகில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் பிரதமர் ஷினவத்ரா தனது அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி நாட்டு நிலவரம் குறித்து விவாதித்தார்.
அப்போது அவர் பேசுகையில், நாம் எல்லாரும் தாய்லாந்து நாட்டினர். நாம் ஒருவர் ஒருவரை மனம் நோகச்செய்யலாமா? நான் இதுவரை பின்வாங்கி விட்டேன். இன்னும் என்ன பின்வாங்குவது என்பது எனக்கு தெரியவில்லை. நான் தாய்லாந்து மண்ணில் நிற்கவும் கூடாது என விரும்புகிறீர்களா? என்று கூறியபடியே கண்ணீர் விட்டு அழுதார்.
இருப்பினும் தாம் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்றார் அவர்.