தாய்லாந்து ராணி மருத்துவமனையில் அனுமதி... சோகத்தில் மக்கள்
தாய்லாந்து ராணி ஸ்ரீகிட் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாங்காக்: மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் மனைவி ராணி ஸ்ரீகிட், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டில் கடந்த 1946ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவர் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ், 70 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் இருந்து வந்தார். உலகில் நீண்ட காலம் ஆட்சிப்புரிந்த மன்னர் என்னும் பெருமை கொண்ட மன்னர் பூமிபால், உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே கடந்த அக்டோபர் 13-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் உலகின் நீண்ட கால மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இந்நிலையில் பூமிபாலின் மனைவியும், ராணியுமான ஸ்ரீகிட் நுரையீரல் தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
மன்னர் பூமிபால் இறந்த சில வாரங்களில் ராணியும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.