தாய்லாந்து மன்னரின் நாயை கிண்டல் செய்தவர் மீது தேச துரோக வழக்கு... 37 ஆண்டு சிறை!
பாங்காங்: தாய்லாந்தில் மன்னரின் நாயைக் குறித்து இணையத்தில் கருத்து தெரிவித்த தொழிலாளி மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தில் ஒற்றையாட்சி நாடாளுமன்ற முறை அரசியல் சட்ட முடியாட்சி நடைபெற்று வருகின்றது. மன்னராக தற்போது பூமிபால் அதுல்யாதெஜ் என்பவர் ஆட்சி நடத்தி வருகிறார்.
அங்கு மன்னரை விமர்சிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வகையில் சட்டம் அமலில் உள்ளது. கடந்த ஆண்டு 400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மன்னரைக் குறித்து கருத்து தெரிவித்ததற்காக சிந்தையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மன்னரின் நாயைக் கிண்டல் செய்ததற்காக தொழிற்சாலை ஊழியர் ஒருவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்தத் தொழிலாளியின் பெயர் தானாகொர்ன் சிரிபைபூன். சமீபத்தில் இவர் மன்னரின் நாய் குறித்து இணையத்தில் கேலி செய்யும் விதத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சிரிபைபூன் மீது தேசத்துரோக வழக்கு மற்றும் மன்னரை அவமதித்த குற்றச்சாட்டு என இரண்டு பிரிவுகளின் கீழ் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தக் குற்றங்களுக்காக அவருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சிரிபைபூனின் வழக்கறிஞர் கூறுகையில், "மன்னருடைய நாய் குறித்து உண்மையில் சிரிபைபூன் என்ன சொன்னார் என்பது குறித்து ராணுவம் எந்த தகவலையும் வெளியிட மறுக்கிறது. மேலும், மன்னரின் நாய்க்காக சட்டம் பயன்படுத்தப்படும் என்று நான் கற்பனை கூட செய்யவில்லை. இது மிகவும் முட்டாள்தனமானது" எனத் தெரிவித்துள்ளார்.
மன்னரின் நாயை விமர்சித்ததற்காக தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் தாய்லாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.