துரியன் பழத்தை ஆகாயத்திற்கு அனுப்பும் தாய்லாந்து.. விண்வெளியில் ஹோட்டல் திறக்க முன்னோட்டம்!
பாங்காக்: தாய்லாந்து விஞ்ஞானிகள் துரியன் பழத்தை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டு இருக்கிறார்கள்.
தாய்லாந்து நாடு பொதுவாக விண்வெளி ஆராய்ச்சியில் இதுவரை எந்த சாதனையும் செய்தது இல்லை. இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பெரிய சாதனை செய்து இருந்தாலும் தாய்லாந்து இதுவரை பெரிதாக சாதிக்கவில்லை.
இந்த நிலையில் விண்வெளியில் உணவு தேவையை கட்டுப்படுத்த தாய்லாந்து முடிவு செய்துள்ளது. விண்வெளி வீரர்களுக்கு உணவு அனுப்ப தாய்லாந்து முடிவு செய்துள்ளது.
துரியன்
துரியன் பழம் தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட பழமாகும். மிகவும் கடினமான தோல் கொண்ட இந்த பழத்தை சில நாடுகளில் உள்ள மக்கள் உணவாக சாப்பிடுகிறார்கள். இதில் மொத்தம் 30 வகை இருக்கிறது. மொத்தம் 9 வகையான பழங்கள், மக்கள் சாப்பிடக்கூடிய வகையில் உள்ளது. முக்கியமாக தாய்லாந்தில் உள்ள மக்கள் இதை அதிகம் சாப்பிடுகிறார்கள்.
அனுப்புகிறார்கள்
தற்போது தாய்லாந்து விஞ்ஞானிகள் இதை ஆகாயத்திற்கு அனுப்ப உள்ளனர். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இதை இந்த மாத இறுதியில் அனுப்ப உள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்றின் உதவியுடன் இந்த துரியன் பழத்தை அவர்கள் விண்வெளிக்கு அனுப்புவார்கள்.
ஆராய்ச்சி
இந்த துரியன் பழத்தை விண்வெளியில் சரியாக ஐந்து நிமிடம் எந்த பாதுகாப்பும் இல்லாமல் மிதக்க விடுவார்கள். பின் அதை மீண்டும் பூமிக்கு சரியாக பாதுகாப்போடு கொண்டு வருவார்கள். பின் இந்த பழத்தை ஒரு மாதம் ஆராய்ச்சி நடத்த தாய்லாந்து விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதன் தோல், உட்பகுதியில் என்ன மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்று ஆராய்ச்சி நடத்துவார்கள்.
ஏன் இப்படி
தாய்லாந்து இதன் மூலம் புதிய புரட்சி ஒன்றை செய்ய உள்ளது. இந்த பழத்தை ஆராய்ச்சி செய்து, அதன் மூலம் ஸ்பேஸ் உணவுகள் தயாரிக்க இருக்கிறது. ஆகாயத்தில் உணவு சப்ளை செய்யும் நாடாக மாற வேண்டும், பூமியில் கிடைப்பதை போலவே ஆகாயத்திலும் உணவு கிடைக்க வழிவகுக்க வேண்டும் என்று தாய்லாந்து இந்த முடிவை எடுத்துள்ளது.