தாய்லாந்து கோவில் குண்டுவெடிப்புக் குற்றவாளி டெல்லி வழியாக துருக்கிக்கு தப்பியோட்டம்
பாங்காக்: எரவான் பிரம்மதேவன் இந்துக் கோவில் குண்டுவெடிப்பிற்கு காரணமான முக்கியக் குற்றவாளி துருக்கி தப்பிச் சென்று விட்டதாக தாய்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ளது எரவான் பிரம்மதேவன் கோவில். இது இந்துக் கோவிலாகும். இங்கு கடந்த மாதம் 17-ம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் உடல் சிதறி பலியாயினர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தாய்லாந்து அரசு கருதியது.
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தாய்லாந்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில், இது தொடர்பாக, கோவிலின் கண்காணிப்பு கேமராவில் பதிவான, மஞ்சள் டி - சர்ட் அணிந்த, குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரை, போலீசார் தேடி வருகின்றனர். இவர் துருக்கிக்கு தப்பிச் சென்று விட்டதாக தாய்லாந்து போலீசார் கூறுகின்றனர்.
குண்டுவெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆகஸ்ட் 31ம் தேதி துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லுக்கு டாக்காவில் இருந்து டெல்லி, அபுதாபி மார்க்கமாக தப்பிச் சென்றதாக தெரிய வந்துள்ளது. இந்த நபரின் பெயர் அபுதுரஹ்மானஅ அபுதுசட்டார் என்று போலீஸார் தெரிவித்துள்ளன். இவர் சீன பாஸ்போர்ட் வைத்துள்ளார்.
குண்டு வெடிப்புக்கான நோக்கம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், பாங்காங்க் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பேரை மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் ஆவார்.
இது தொடர்பாக மலேசியா போலீஸ் ஐ.ஜி. காலித் அபுபக்கர் கூறுகையில், "தாய்லாந்து குண்டுவெடிப்பு தொடர்பாக, பாகிஸ்தானியர் உட்பட, மூன்று பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த தகவல், தாய்லாந்து போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவரையும், தாய்லாந்திடம் ஒப்படைக்க மாட்டோம்; நாங்கள் முழுமையாக விசாரித்த பிறகே, அது குறித்து முடிவு செய்வோம்" என்றார்.
ஏற்கனவே, குண்டுவெடிப்பு தொடர்பாக, பிலால் முகமது, யூசுப் மெராலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பிலால் முகமது போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'குண்டுவெடிப்பு திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட இசான், சீனாவிற்கு தப்பிவிட்டான்' எனத் தெரிவித்திருந்தான்.
இது தவிர கடந்த வாரம், இரண்டு இந்தியர்களை பிடித்து விசாரித்த தாய்லாந்து போலீசார், 'குண்டு வெடிப்பில் அவர்களுக்கு தொடர்பில்லை' எனக் கூறி, விடுவித்து விட்டனர்.