மலேசியா, சிங்கப்பூரில் களைகட்டிய தைப்பூசம்.. அலகு குத்தி, காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கோலாலம்பூர்: மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால்குடம் தூக்கியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தைப்பூசம் என்பது முருகப் பெருமானை கொண்டாடும் விழாவாகும். தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது.
தேவர்களுக்கு இன்னல்களை அளித்த அசுரர்களை ஒழிக்க பார்வதி தேவி முருகப் பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில் தான். வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
அவ்வகையில், வேலினை வழிபட்டால் தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது நம்பிக்கை.
தைப்பூசம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் இன்று தைப்பூசத் திருவிழா களை கட்டியது.
கோலாலம்பூரின் புறப்பகுதியில் உள்ள பத்துகுகை முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கனி உடம்பில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதேபோல் ஆண்கள் பெண்கள் என பலரும் பால்குடம் ஏந்தி, தேங்காய் உடைத்து, மொட்டை அடித்தும் பக்தி பரவசத்துடன் முருகப்பெருமானை வழிப்பட்டனர். பால் காவடி, பன்னீர் காவடி புஷ்ப காவடி என விதவிதமான காவடிகளை எடுத்தும் பக்தர்கள் வழிபட்டனர்.
அதிகாலை முதலே 272 படிகளை கொண்ட பத்துமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வெறும் காலுடன் நடந்து சென்று வழிபட்டனர். பலர் முருக கடவுளை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து உடம்பில் கொக்கிகள் மாட்டி இழுத்துச்சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதேபோல் சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியிலும் தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாக்கு, கன்னம், உதடுகளில் அலகு குத்தி பக்தர்கள் தங்களின் நன்றியை செலுத்தினர்.