வியக்க வைத்த அதிசய கண்டுபிடிப்புகள்.. இயற்பியலுக்கான நோபல் பரிசை தட்டித் தூக்கிய 3 அறிஞர்கள்
சுவீடன்: 2019ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், டிடியர் கியூலோஸ் ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
சுவீடனில் உள்ள ஸ்டால்க்கோமில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல் அண்டவியலில் கோட்பாட்டு கண்டுபிடிப்புகளுக்காக ஒரு பகுதி நோபல் பரிசு ஜேம்ஸ் பீபிள்ஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள பாதி பரிசு தொகை சூரிய வகை நட்சத்திரத்தை சுற்றும் வெளிக்கோளை கண்டுபிடித்ததற்காக மைக்கேல் மேயர், டிடியர் கியூலோஸ்க்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என நோபல் பரிசு கமிட்டி அறிவித்துள்ளது.
ஜேம்ஸ் பீபிள்ஸ் கண்டுபிடிப்புகள்
இது தொடர்பாக நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள செய்தியில், கோடிக்கணக்கான விண்மீன் திரள்கள் மற்றும் விண்மீன் கொத்துகளுடன் அகிலம் உருவானது பற்றி எடுத்து சொன்னவர் ஜேம்ஸ் பீபிள்ஸ். அவரது தத்துவார்த்த கட்டமைப்பானது, இரண்டு தசாப்தங்களாக (20 ஆண்டுகளாக) உருவாக்கப்பட்டது, பிக் பேங் முதல் இன்று வரை பிரபஞ்சத்தின் வரலாற்றைப் பற்றிய நமது நவீன புரிதலின் அடித்தளமாகும்.
|
சூரிய குடும்பத்திற்கு வெளியே
இந்த ஆண்டின் இயற்பியல் பரிசு பெற்றுள்ள மைக்கேல் மேயரும் டிடியர் கியூலோஸ்ம் அறியப்படாத உலகங்களான நமது விண்வெளி , பால்வீதியை ஆராய்ந்தனர். 1995 ஆம் ஆண்டில், அவர்கள் நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே ஒரு கிரகத்தை முதன்முதலில் கண்டுபிடித்தனர், இது ஒரு கோள் ஆகும், சூரிய வகை நட்சத்திரமான 51 பெகாசியைச் சுற்றி வருகிறது.
பல கோள்கள் கண்டுபிடிப்பு
இதன் மூலம் மைக்கேல் மேயர் மற்றும் டிடியர் குலோஸ் ஆகியோர் விண்வெளி துறையில் ஒரு புரட்சியைத் தொடங்கி உள்ளார்கள். இதன் காரணமாக 4,000 க்கும் மேற்பட்ட வெளிகோள்கள் பால்வீதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நம்ப முடியாத செல்வ வளத்துடன் விசித்திரமான புதிய உலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன என நோபல் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.
மருத்துவ நோபல் பரிசு
முன்னதாக சுவீடனில் உள்ள ஸ்டால்க்கோமில் நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 2019ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் வில்லியம் ஜீ கேலின், சர் பீட்டர் ரேட்கிளிப் , கிரேக் எல் செமன்சா ஆகியோருக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.