அனிதாவை போல தந்தையின் பெயரும் சண்முகம் என்பதற்காக பிறந்த நாள் கொண்டாடாத அமெரிக்க சிறுமி!
தனது தந்தையின் பெயரும், அனிதாவின் தந்தையின் பெயரும் சண்முகம் என்பதால் இன்று தனது தந்தையின் பிறந்தநாளை கொண்டாடாமல் தவிர்த்த 9 வயது அமெரிக்க சிறுமி.
வாஷிங்டன்: நீட் தேர்வால் மருத்துவ படிப்பு தகர்ந்து போனதை அடுத்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் தந்தை பெயரும் தனது தந்தை பெயரும் ஒன்று என்பதால் தனது தந்தையின் பிறந்தநாளை கொண்டாடாமல் தவிர்த்துள்ளார் இந்த 9 வயது சிறுமி.
பிளஸ் 2 தேர்வில் அதிகமாக மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வில் சோபிக்க முடியாமல் அரியலூர் மாணவி அனிதா உச்ச நீதிமன்றம் வரை சென்றார். எனினும் நீதி கிடைக்காததால் அவர் தனது உயிரை மாய்த்து கொண்டார்.
இதனால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளிலும் அனிதாவுக்கு ஆதரவான குரல்கள் ஒலித்து வருகின்றன.
அனிதாவுக்கு அஞ்சலி
அமெரிக்காவில் 9 வயது சிறுமியின் தந்தையின் பெயர் சண்முகம். அனிதாவின் தந்தையின் பெயரும் சண்முகம் என்பதால் அவரது துக்கத்தை பகிருவதற்காக தனது தந்தையின் பிறந்த நாளை கொண்டாடாமல் அனிதாவுக்காக அஞ்சலி செலுத்தினார் அந்த சிறுமி.
மருத்துவம் படிக்க...
இதுகுறித்து அவர் வெளியிட்டுருக்கும் வீடியோ பதிவில் அவர் குறிப்பிடுகையில், இன்று எனது தந்தையின் பிறந்தநாள். ஆனால் அனிதா நீட் தேர்வால் தனது மருத்துவ படிப்பு நிறைவேறாமல் போனதால் தற்கொலை செய்து கொண்டார்.
பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை
அவரது தந்தையின் பெயரும் சண்முகம். இதனால் அவரது துக்கத்தை பகிர்ந்து கொள்ள எனது தந்தையின் பிறந்த நாளை நாங்கள் கொண்டாடவில்லை. அனிதாவின் மரணம் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணம் செலவழிக்க முடியாது
அமெரிக்காவில் மருத்துவ கல்லூரியில் சேர எம்கேட் என்ற மருத்துவ சேர்க்கைக்கான அனுமதி தேர்வு என்பது நடத்தப்படும். அதேபோல் இந்தியாவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளை எழுத பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்றால் ஏராளமான பணம் செலவழிக்க வேண்டும்.
நீட் குறித்து தெரியவில்லை
கூலித் தொழிலாளியான அனிதாவின் தந்தையின் மாத வருமானவே 50 டாலர்கள்தான் என்ற போது அவரால் எப்படி அந்த செலவை சமாளிக்க முடியும்.அதனால் அனிதாவுக்கு நீட் தேர்வு குறித்து அந்தளவுக்கு தெரியவில்லை. அதனால் மற்ற மாணவர்களை போல் அவரால் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறவில்லை.
வாக்குறுதியை மீறிவிட்டது
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்த நிலையில் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை மீறி பேசியது. அவரால் மறுபடியும் தேர்வு எழுத இயலாத நிலை உள்ளதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்திய அரசு
மருத்துவம் இல்லாவிட்டால் அனிதா வேறு படித்திருக்கலாம் என்று நாம் சொல்ல முடியாது. ஆனால் இதற்கு மேலாவது மாணவர்கள் தாங்கள் விரும்பியதை படிக்க சாதகமான சூழலை இந்திய அரசு உருவாக்கும் என்று நம்புகிறேன் என்று அந்த குழந்தை உருக்கமாக பதிவிட்டுள்ளார்.