20 ஆயிரம் வருஷத்திற்கு முந்தைய காண்டாமிருகம்.. குபீரென்று வெளியே வந்த 'அழியா உடல்..' ஆடிப்போன மக்கள்
மாஸ்கோ: 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இறந்ததாக கூறப்படும் காண்டாமிருகம் ஒன்றின் உடல் பெரியளவுக்கு சிதையாமல் மீட்கப்பட்டுள்ளது.
பெர்மாஃப்ராஸ்ட் எனப்படும் நிரந்தர உறைபனிப் பரப்பில் காண்டாமிருகத்தின் உடல் புதைந்து கிடந்தததால் இது சாத்தியமாகியுள்ளது.
வடகிழக்கு ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில், யகுடியாவில் உள்ள அபிஸ்கி வட்டாரத்தில் கடும் குளிர் நிலவுவது வழக்கம். அங்கு நிரந்தரமாகவே உறைபனி இருக்கும். ஆனால் உலகம் வெப்பமயமாதல் அடைந்து வருவதால், அந்த உறைபனி உருகியது.
ஜன. 3-ல் மு.க.அழகிரி ஆலோசனை.. கலைஞர் திமுக பெயரில் மதுரையில் பரபர போஸ்டர்கள்!
ஐஸ் ஏஜ் காலகட்டம்
இப்படி பனி உருகியபோதுதான், காண்டாமிருகத்தின் உடல் வெளியே தெரிந்தது. உள்ளூர் மக்கள் இதைப் பார்த்து காண்டாமிருகத்தை வெளியே எடுத்துள்ளனர். கெட்டுப் போகாமல், அருமையாக பதப்படுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது அந்த உடல். ஐஸ் ஏஜ் என அழைக்கப்படும் பழங் காலத்தை சேர்ந்த 'வுல்லி ரைனோ' வகை காண்டாமிருகத்தினுடைய உடல் இது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காண்டாமிருகம் உடல் சிதையவில்லை
இந்த விலங்கின் உள் உறுப்புகள் கூட பெரும்பாலும் சிதையவில்லை என்பது பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. ஐஸ் ஏஜின் பிந்தைய காலத்தில், அதாவது 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகள் முன்பு இந்த காண்டாமிருகம் வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் மேலதிக ஆய்வுகள் அடுத்த ஒரு மாதமாக நடைபெற உள்ளன.
காரணம் கூட தெரிஞ்சு போச்சி
இந்த காண்டாமிருகத்தின் உடலை பரிசோதித்தார் வேலரி பிளாட்நிகோவ் என்ற ஆய்வாளர். அவர் அந்த காண்டாமிருகம் எப்படி இறந்திருக்கும் என்பதைக் கூட கண்டுபிடித்துள்ளார். காண்டாமிருகம் 3 அல்லது 4 வயது ஆனபோது, நீரில் மூழ்கியதால் இறந்திருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். ஏனெனில், இந்த விலங்கின் பெரும்பகுதியில் மென்திசுக்கள் உள்ளன. குடலும், பாலுறுப்பும்கூட இருக்கிறதாம். வழக்கமாக மூக்கின் அருகே இருக்கும் கொம்பு விரைவில் சிதையும். ஆனால், இந்த காண்டாமிருகத்திற்கு இருக்கும் சிறிய கொம்பும் கூட சிதைவடையாமல் இருக்கிறது. அந்த அளவுக்கு இது பத்திரமாக இருந்துள்ளது.
பல அரிய உயிரினங்கள்
இப்படித்தான் 2014ம் ஆண்டு இன்னொரு இளம் வுல்லி ரைனோ காண்டாமிருகத்தின் உடல் இதே பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அந்த காண்டாமிருகத்திற்கு சாஷா என்று விஞ்ஞானிகள் பெயரிட்டனர். சைபீரியா மிகுந்த பனிப் பகுதியாகும். கடந்த சில ஆண்டுகளில் வுல்லி ரைனோ வகை காண்டாமிருகங்கள், மாமோத் என அழைக்கப்படும், பேருருவம் கொண்ட அழிந்துவிட்ட யானைகள், குதிரைக் கன்று, நாய்க்குட்டிகள், குகை சிங்கத்தின் குட்டிகள் போன்றவற்றின் உடல்கள் இங்கு கிடைத்துள்ளன.
காலச் சக்கரம்
புவி வெப்பமடைந்து வருவதால் ரஷ்யாவின் தூரக் கிழக்கு மற்றும் தூர வடக்குப் பகுதிகளில் உள்ள நிரந்தர உறைபனிப் பரப்பு பெருமளவு உருகிவருவதால் இதைப் போல பனியில் உறைந்து கிடந்த உடல்கள் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுகின்றன என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரத்தை மனித மனத்தில் படம் போல காட்டி, ஒரு நிமிடத்தில் அந்த காலகட்டத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறது இந்த விலங்குகள்.