மனிதாபிமானமற்ற முறையில் பூனைகளை கொலை செய்யும் சீரியல் கில்லர்: பிரிட்டன் மக்கள் அச்சம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிட்டனில் உள்ள வீடுகளில் வளர்க்கப்பட்டுவரும் பூனைகள் மீது தொடர் கொலைகளை செய்துவரும் நபர் ஒருவர் தாக்குதல் நடத்தி பிராணி பிரியர்களிடையே ஒருவித அச்சத்தையும், அவநம்பிக்கையும் ஏற்படுத்தி வருகிறார்.
இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் வாசகர்களுக்கு கவலை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.
சாண்டெல்லேயின் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலிருந்த பூனைக்கு என்ன நிகழ்ந்தது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. அதன் பெயர் ஸ்கூட்டர்.
சாண்டெல்லே கடைசியாக தன் பூனையை பார்த்தபோது, சமையலறையிலிருந்த நாற்காலி மீது அமர்ந்துகொண்டிருந்தது.
ஆனால், அடுத்தநாள் காலை பூனை காணாமல் போனது.
- கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கும் உலகின் நீண்ட பூனை!
- வீட்டையும், வேலையையும் தக்கவைத்துக்கொண்ட லேரி பூனை
பூனையைத் தேடி வீதிகளில் சாண்டெல்லே அலைந்து கொண்டிருந்தபோது, அவரது பக்கத்துவீட்டுக்காரர், ஸ்கூட்டரை நள்ளிரவு ஒருமணி அளவில் இறந்த நிலையில் தனது வீட்டருகே பார்த்ததாகவும், இறந்த உடலை மறைக்க துணி எடுத்துவர சென்றுவிட்டு திரும்பியபோது பூனை அந்த இடத்தில் இல்லை என்றும் சாண்டெல்லேவிடம் தெரிவித்தார்.
பின்னர், அந்நாளின் பிற்பகுதியில், சாண்டெல்லேவின் மற்றொரு பக்கத்துவீட்டுக்காரர், பூனையை பார்த்ததாக சாண்டெல்லேவிடம் தெரிவித்தார்.
ஆனால், இம்முறை சாண்டெல்லேவின் அண்டை வீட்டாரின் புல்வெளிப்பகுதியில், வால் துண்டிக்கப்பட்டு, தலை முதல் வயிற்று பகுதி வரை அறுக்கப்பட்டு, குடல்கள் வெளியே தொங்கியபடி செத்து கிடந்தது ஸ்கூட்டர்.
ஸ்கூட்டரின் மரணம் விபத்தல்ல படுகொலை என்பதில் சாண்டெல்லே உறுதியாக இருந்தார்.
லண்டனில் உள்ள எம் 25 என்ற நெடுஞ்சாலையை சுற்றி பூனைகளை கொலை செய்யும் நபர் ஒருவர் இருந்து வந்தது குறித்து செய்திகளை சாண்டெல்லே படித்துள்ளார்.
ஆனால், தான் ஆசையாக வளர்த்த பூனையே இப்படி ஒரு ஆபத்தை சந்திக்கும் என்பதை சாண்டெல்லே துளியும் எதிர்பார்க்கவில்லை.
பிரிட்டனின் தெற்கு கடற்கரை பகுதியிலிருந்து 70 மைல் தூரத்தில் செயிண்ட் லியோனர்ட்ஸ் ஆன் சீ என்ற பகுதியில் சாண்டெல்லே வசித்து வருகிறார்.
''நான் எனது பூனைகளை பூட்டிவைக்க விரும்பவில்லை. அப்படி பூட்டியிருந்தால் இந்நேரம் ஸ்கூட்டர் உயிருடன் இருந்திருக்கும்,'' என்று வருந்துகிறார் சாண்டெல்லே.
சாண்டெல்லேவும், அவரது கணவரும் தற்போது புதிய வீட்டிற்கு செல்வது குறித்து யோசித்து கொண்டிருக்கின்றனர். அங்கு அவர்கள் வளர்க்கும் மற்ற பூனைகள் வெளியே செல்வதை தடுத்து தோட்டத்தை பாதுகாக்க முடியும்.
2015 ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டனில் இயங்கும் பூனைகளை கொலை செய்யும் நபரே ஸ்கூட்டரின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று சாண்டெல்லே நினைக்கிறார்.
தெற்கு லண்டனில் உள்ள கிரோய்டன் சுற்றியுள்ள பகுதியில் பூனை கொலைகள் குறித்து நிறைய புகார்கள் வந்ததையடுத்து, ஊடகங்கள் கொலைக்கார நபருக்கு கிரோய்டன் கேட் கில்லர் என்ற பெயர் வைத்தன.
ஆனால், லண்டனின் பிற பகுதியிலும் பூனை கொலைகள் குறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இதையடுத்து, கொலைகாரருக்கு எம் 25 கேட் கில்லர் என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டது.
கொலையாளியின் வேட்டையாடும் எல்லை கிரோய்டனை தாண்டி, கெண்ட், பிர்மிங்ஹாம், ஐல் ஆஃப் வைட் மற்றும் விரால் ஆண்ட் ஷெஃபீல்ட் ஆகிய பகுதிவரை பரவியது.
கடந்த ஜூன் மாதம், கிரோய்டன் பகுதியில், சிறிய குழுவொன்று பூனைகளை பறிகொடுத்தவர்களுக்கு ஆதரவாக நினைவஞ்சலி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டனர்.
பூனைகளை கொலை செய்ய கொலையாளி என்னென்ன முறைகளை பயன்படுத்துகிறார் என்பதை ஸ்னார்ல் என்பவர் விவரிக்கிறார்.
கொலையாளி பூனையை முதலில் கவர்ந்திழுக்க வீட்டு விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவுகளை கொடுப்பதாகவும், சமைக்கப்படாத கோழி இறைச்சியை கொடுப்பதாகவும் ஸ்னார்ல் கூறுகிறார்.
அதன்பிறகு, பூனையை உடனடியாக கொல்லும் கொலையாளி பூனையின் ரத்தம் உறையும் வரை சுமார் அரைமணி நேரத்திற்கு காத்திருக்கிறார்.
தொடர்ந்து, அதன் தலை, நகம் மற்றும் வால்களை வெட்டி எடுத்து பூனை எங்கு கொல்லப்பட்டதோ அதற்கு அருகே பூனையின் உடலை கொலையாளி போட்டுவிடுவார்.
தொடர் கொலைகளை நிகழ்த்தும் கொலையாளிகள் விலங்குகளை கொல்வதன் மூலம் தங்களது தொழிலை தொடங்குகின்றனர்.
இந்த பூனை கொலைக்காரர் தனது கவனத்தை மனிதர்களை நோக்கி திருப்புவதற்கு நேரம் அமைவது பொறுத்தே இருக்கிறது என்று அச்சப்படுகிறது போலீஸ் துப்பறியும் நிபுணரான ஆண்டி கோலின்ஸ்.
ஏன் பூனைகள் குறிவைக்கப்படுகின்றன என்பதற்கு விளக்கமளித்த கோலின்ஸ், பெண்மையுடன் பூனைகள் தொடர்புடையவை என்பதால் தான் கொலையாளிகள் பூனைகளை கொல்கிறார்கள் என்கிறார்.
''இதுவெறும் பூனைகளுடன் நின்றுவிடாது. ஒருகட்டத்தில், பாதிக்கப்படக்கூடிய பெண்கள் மற்றும் சிறுமிகளை மீது கொலையாளி தனது பலத்தை பிரயோகிக்கக்கூடும்'' என்கிறார்.
கொலையாளி பிடிபடும் பட்சத்தில் கொலையாளி மீது கிரிமினல் சேதங்களை விளைவித்ததாக குற்றச்சாட்டு பதியப்படும். ஆனால், கோலின்ஸ் இதைவிட கடுமையான குற்றங்களில் குற்றம்சாட்ட நினைக்கிறார்.
பிற செய்திகள்:
- பராக் ஒபாமாவின் அடுத்த பதவி நீதிபதி!
- ''ஹார்வி வலுக்கட்டாயமாக என் வீட்டிற்கு நுழைந்து என்னை வல்லுறவு செய்தார்'': மேலும் ஒரு நடிகை புகார்
- இலங்கையில் முதுநிலை பட்ட படிப்பு தேர்வை எழுதும் மரண தண்டனை கைதி!
- சோமாலியாவில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்; 14 பேர் பலி