75 ஆண்டுகால இனிய வாழ்க்கை... ஒன்றாகவே கை கோர்த்துக் கொண்டு உயிரிழந்த தம்பதி
கலிபோர்னியா: அமெரிக்காவில் 75 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த தம்பதி ஒன்று, ஒன்றாகவே கைகோர்த்தபடியே உயிரிழந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த கணவன், மனைவி ஜேனெட் (96), அலெக்சாண்டர் (95). தங்களது சிறு வயதில் நண்பர்களாக அறிமுகமான இவர்கள், 1940ம் ஆண்டு கணவன், மனைவி ஆனார்கள்.
சுமார் 75 ஆண்டுகள் சந்தோஷமாக சேர்ந்து வாழ்ந்த இந்தத் தம்பதிக்கு, மரணமும் தங்களைப் பிரித்து விடக் கூடாது என்பது ஆசை. இந்நிலையில், சமீபகாலமாக முதுமை காரணமாக உடல்நலக் குறைபாடால் இருவரும் அவதிப்பட்டு வந்தனர். அருகருகே படுக்கையில் இருந்த படி இருவரும் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்நிலையில், ஒரே நேரத்தில் உயிரிழக்க வேண்டும் என்ற ஆசையை தங்களது பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இருவரும் ஒரே படுக்கைக்கு மாற்றப் பட்டனர். அதனைத் தொடர்ந்து இருவரும் தங்களது ஆசைப் படியே ஒரே படுக்கையில் கைகோர்த்தபடி உயிரிழந்தனர்.
இந்தத் தம்பதிக்கு 5 குழந்தைகளும், 16 பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவர்களில் 6 பேர் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.