வாஸ்துபடி வீட்டை கட்டலாம்.. முதல்முறையாக வாஸ்துபடி உருவான நகரம் இதுதான்.. நாசாவின் வாவ் போட்டோ!
Recommended Video
வாஷிங்டன்: இந்தியாவில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட நகரம் ஜெய்ப்பூர் என்றும் அதன் புளூபிரிண்ட் புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.
வாஸ்து சாஸ்திரப்படி தற்போது வீடுகள் கட்டுவது பிரபலமாகி வருகிறது. இந்த சாஸ்திரப்படி வீடுகள், அலுவலகங்களை கட்டினால் லட்சுமி கடாட்ஷம் கூடி வரும் என்றும், பிணி, நோய் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. வீடுகளில் சமையலறை, படுக்கை அறை, கழிப்பறை, செப்டிக் டேங்க் உள்ளிட்டவை எங்கெங்கு இருக்க வேண்டும் என்ற சாஸ்திரம் உள்ளது. அதன்படியே நிபுணர்கள் வீடுகளை கட்டுகின்றனர்.
இந்த வாஸ்து சாஸ்திரப்படி ஒரு வீட்டை கட்டி அதில் வசிப்போருக்கே செல்வம் கொழிக்கும், நோய், நொடிகள், கெட்ட சக்திகள் அகலும் என்றால், ஒரு நகரத்தையே வாஸ்துபடி அமைத்தால் எப்படி இருக்கும்? இது போல் சிந்தித்து 1726-ஆம் ஆண்டு ஜெய்ப்பூரை மகாராஜா சவாய் ஜெய் சிங் உருவாக்கினார்.
கவரும் விதம்
இந்த நகரத்தை ஒரே கட்டத்தில் முழு வீச்சாக கட்டி முடித்தார். இந்த ராஜா ஆண்ட நகரத்தின் தலைநகராக இருந்த அம்பரில் கடும் நெரிசல் இருந்ததால் புதிய தலைநகராக ஜெய்ப்பூரை நிர்மானித்தார். மேலும் வெகு தொலைவிலிருந்து தொழில் தொடங்க வருவோரை கவரும் விதமாகவும் இந்த நகரம் அமைக்கப்பட்டது.
நகரத்தை சுற்றி
பழைய தலைநகரான அம்பர் மலை பகுதியில் இருந்ததால் வணிகம், வாணிபத்துக்கு கடினமாக இருந்தது. இதனால் நிலப்பகுதியில் ஜெய்ப்பூர் நகரம் அமைக்கப்பட்டது. இந்த நகரத்தை சுற்றி மலைப்பகுதிகள், கோட்டைகள், சோதனை சாவடிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. இதற்காக ராஜா ஜெய்சிங் இந்திய கட்டட கலை நிபுணர் வித்யாதர் பட்டாசார்யாவை அணுகினார்.
பெரிய சுவர்
அவர் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அந்த நகரை உருவாக்குவதற்கான ப்ளூபிரிண்டை உருவாக்கினார். பல்வேறு கட்டங்களாக (கிரிட்) நகரத்தை பிரித்தார். மொத்தம் 9 சதுரக் கட்டங்களாக பிரித்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களை குறிக்கும். எதிரிகள் ஊடுருவுவதை தடுக்க ஒரு பெரிய சுவரை எழுப்பவும் திட்டமிட்டார்.
சந்திரன் வாயில்
அந்த சுவற்றில் வாயில்களை அமைத்தார். அந்த வாயில்களுக்கு பெயர்களும் வைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக கிழக்கு பகுதியில் உள்ள வாயிலுக்கு சூரியன் வாயில் என்றும் மேற்கு பகுதியில் உள்ள வாயிலுக்கு சந்திரன் வாயில் என்றும் பெயர் வைத்தார்.
துல்லியமாக கணக்கிடும் கடிகாரம்
6 மீட்டர் உயரம் கொண்ட சுவற்றில் பல்வேறு நினைவுச்சின்னங்களும் அமைக்கப்பட்டன. நேரத்தை கணக்கிடுவது, கிரகணங்களை முன் கூட்டியே அறிவிப்பது, கோள்களின் சாய்மானங்களை அறிவது, விண்மீன்களை அறிவது ஆகியவற்றுக்காக ஜந்தர் மந்தர் என்ற வான் ஆய்வுக் கூடத்தை நிறுவினார். மேலும் நேரத்தை துல்லியமாக கணக்கிடும் ராட்சத சூரிய கடிகாரத்தையும் அமைத்தார்.
பிங்க் நகரம்
அரசர் சவாய் பிரதாப் சிங் 5 அடுக்குகள் கொண்ட அரண்மனையை உருவாக்கினார். அதற்கு ஹவா மகால் என பெயரிட்டார். இதில் அரச குடும்ப பெண்கள் அன்றாட நிகழ்வுகளை பார்க்கும்படி மாடங்களும் அமைக்கப்பட்டன. 1853-ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் வந்த வேல்ஸ் அரசர் இந்த கட்டடங்களுக்கு பிங்க் நிற வண்ணத்தை பூசுமாறு கூறினார். பிங்க் நிறம் வரவேற்பையும் உபசரிப்பையும் குறிக்கும் என்பதால் அந்த நிறத்தை அடிக்கச் செய்ததுடன் ஜெய்ப்பூருக்கு பிங்க் நகரம் என பெயரையும் இட்டார்.
நாசா புகைப்படம்
மதில்கள், வாயில்கள், முக்கிய நினைவுச்சின்னங்கள் ஆகியவை அன்று அமைத்தது போல் இன்றும் காணப்படுகின்றன. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடக் கலைக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதபடி மெட்ரோ ரயில் திட்டம் பாதாளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் ஜூலை 2019-இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் புகைப்படங்களை நாசா கடந்த ஆண்டு வெளியிட்டுள்ளது.