லண்டன் அருங்காட்சியகத்தில் முதன்முறையாக சத்யராஜின் கட்டப்பா சிலை!
உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜின் சிலையும் இடம் பெற உள்ளது.
Recommended Video
லண்டன் : உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜின் சிலையும் இடம் பெற உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் முதன்முதலில் தமிழர் சத்யராஜின் மெழுகு சிலை இடம்பெறப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1978 முதல் தமிழ்த்திரையுலகில் வில்லன், ஹீரோ, குணச்சித்திர நடிகர் என்று பலரின் அபிமானங்களைப் பெற்ற நடிகராக வலம் வருகிறார் சத்யராஜ். கோவையைச் சேர்ந்த தமிழரான இவர் பெரியார்,எம்ஜிஆர் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பெரியார் கொள்கைகள் மீது கொண்ட ஈர்ப்பால் பெரியார் திரைப்படத்தில் பணம் வாங்காமலே பெரியார் வேடமிட்டு நடித்துக் கொடுத்தார்.
தமிழர்களின் பிரச்னைகளுக்கு முதன்முதலில் குரல் கொடுப்பவரும் சத்யராஜே. காவிரி விவகாரம், முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரின் தூக்கு தண்டனைகளை எதிர்த்தும் குரல் கொடுத்து வருபவர். அண்மையில் பெரியார் சிலை உடைப்பு விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபபெமடுத்த போதும் கூட தன்னுடைய எதிர்ப்பை வீடியோ மூலம் வெளியிட்டார்.
தமிழர், சிறந்த நடிகர்
தமிழராகவும், நடிகராகவும் தன்னுடைய பணியை நேர்த்தியாக செய்து வருபவர் சத்யராஜ். எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சத்யராஜ்.
கட்டப்பாவாகவே வாழ்ந்த சத்யராஜ்
பாகுபலி 2 வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது பாகுபலியை கொன்றது யார் என்ற கேள்வி. இந்த கேள்விக்கான பதிலாக கட்டப்பாவின் கதாபாத்திரம் மிக பிரபலமாக பேசப்பட்டது. சத்யராஜ் கட்டப்பா கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டி இருந்தார்.
சத்யராஜின் மெழுகு சிலை
பாகுபலி 2 படத்தின் பிரம்மாண்டங்கள் பிரபாஸ், அனுஷ்கா நடிப்பைப் போல சத்யராஜின் நடிப்பும் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் 'கட்டப்பா' சத்யராஜின் சிலை வைக்கப்பட உள்ளது.
தமிழரின் முதல் மெழுகு சிலை
இந்த அருங்காட்சிகத்துக்குச் செல்லும் முதல் தமிழரின் சிலை சத்யராஜின் சிலை என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். இந்த முக்கியமான முடிவையடுத்து சத்யராஜிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.