பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாத விரக்தி.. பதவி விலகல் முடிவை எடுத்த தெரசா மே
லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற அனுமதி கோரிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை. இதனையடுத்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்
ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973 முதல் பிரிட்டன் உள்ளது. இந்த கூட்டமைப்பில் இணைந்ததால் பிரிட்டன் தனது தனித்துவத்தையும், இறையாண்மையையும் இழந்துவிட்டதாக பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு பிரிட்டன் மக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பெரும்பாலான மக்கள் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த வாக்கெடுப்பு முடிவை அடுத்து ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது என பிரெக்ஸிட் ஒப்பந்தம் போட்டப்பட்டது.
ஆனால் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்கவில்லை. பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற தெரசா மே இதுவரை 3 முறை முயற்சி செய்துவிட்டார். ஆனால் மூன்று முறையுமே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தற்போது நான்காவது முறையாக பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை அவர் தாக்கல் செய்துள்ளார். இதன் மீதான வாக்கெடுப்பு வரும் ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் தெரசா மேவின் தொடர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல முக்கிய அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
திக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த 'அகோரிபாபா' மாயம்.. ம.பி.யில் பரபரப்பு
பிரதமர் மற்றும் ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து தெரசா மே விலக வேண்டும் என்ற எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் தெரசா மே அதிர்ச்சியடைந்தார் அவரது அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தெரசா மே. அப்போது கண்ணீர் மல்க பேசிய அவர் பிரிட்டன் மக்களவையில் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற இயலவில்லை.
இதனால் நான் கனசர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியை வரும் ஜூன் 7-ல் ராஜினாமா செய்கிறேன் என உணர்ச்சிப்பூர்வமாக அறிவித்தார். மேலும் பிரிட்டன் பிரதமராக 2 முறை பணியாற்றியதை என் வாழ்நாள் கவுரவமாக கருதுகிறேன். கவலையின்றி நன்றியுணர்வோடு விடைபெற விரும்புகிறேன் என்றார்
மேலும் பேசிய அவர் கனசர்வேட்டிவ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை மட்டுமே தாம் பிரதமராக நீடிப்பேன் என்றார்