விரைவில் கைதாவான் தாதா தாவூத் இப்ராஹிம்.. சொடக்குப்போட்டு சொல்லும் போலீஸ்!
இந்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதியாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்னின் மேனேஜர் ஜபிர் மோட்டி என்பவரை லண்டனில் போலீசார் கைது செய்தனர்
லண்டன்: இந்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதியாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்னின் மேனேஜர் ஜபிர் மோட்டி என்பவரை லண்டனில் போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் 1993ஆம் ஆண்டில் நடந்த முன்னூறுக்கும் மேற்பட்ட உயிர்களை கொன்று குவித்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய காரணகர்த்தாவான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை இந்திய அரசு தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.
தாவூத் இப்ராஹிம் துபாயில் தாய்மறைவாக வாழ்ந்து வருவதாகவும் அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகளையும், கூலிப்படையினரையும் வைத்து இந்தியாவில் பல பெரிய நிகழ்வுகளை செய்துவருகிறார் என்றும் தகவல்கள் வருகிறது. ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது போன்ற குற்றங்களை நடத்தி வருகிறார்.
அதேபோல்,இந்தியாவை அழிக்கும் எண்ணத்தில் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த துடிக்கும் பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுப்பதாகவும் தாவூத் இப்ராகிம் மீது குற்றச்சாட்டு உள்ளது. அவர்களை எல்லா விதத்திலும் தாவூத் இப்ராகிம் ஆதரித்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான், பிரிட்டன், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளில் தாதா தொழிலில் இன்றும் கொடிகட்டி பறந்து வரும் தாவூத் இப்ராகிம் இன்றும் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறான்.
இந்நிலையில், தாவூத் இப்ராகிமின் நிதி விவகாரங்களை கவனித்து வரும் ஜபிர் மோட்டி என்பவனை லண்டன் நகரில் உள்ள ஹில்டன் ஓட்டலில் போலீசார் கைது செய்துள்ளனர், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஜபிர் மோட்டி பத்து வருடங்களாக பிரிட்டன் நாட்டு குடியுரிமை பெற்று லண்டனில் தங்கி வந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
தாவூத் இப்ராகிம் மட்டுமல்ல அவனது குடும்பத்தினர் அனைவருக்குமே வரவு-செலவு விவகாரங்களையும் ஜபிர் மோட்டி கையாண்டு வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜபிர் மோட்டியிடம் லண்டன் போலீசார் நடத்தும் விசாரணையில் தாவூத் இப்ராகிமின் எல்லா சொத்துகள், முதலீடுகள் தொடர்பான விபரங்கள் மட்டுமின்றி இதர கூட்டாளிகள் பற்றியும் பல உண்மைகள், ரகசியங்கள் வெளிவரும் என கருதப்படுகிறது. இதனால் தாவூத் விரைவில் கைதாவான் என்று போலீசார் கூறியுள்ளனர்.