ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து !
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மின்னல் வேகத்தில் பிற பிரிவுகளுக்கும் பரவி எரியத் தொடங்கியது. இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
1971 டிசம்பர் 2 ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்டது. அது வரையிலும் சிதறிக்கிடந்த ஆறு அமீரகங்கள் ஒரே கொடியின்கீழ் அணிவகுத்து நின்றன. அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் கைவான், புஜைரா ஆகிய நாடுகள் தான் முதல் கட்டத்தில் ஒருங்கிணைந்தன. இதில் ஒன்றான அஜ்மனில் பல அடுக்கமாடி குடியிருப்புகள் உள்ளன.
இது துபாயில் இருந்து 14 மைல் தொலைவில் அமைந்துள்ளது. அங்குள்ள சோவான் பகுதியில், 12 பிரிவுகளாக 3 ஆயிரம் வீடுகளை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. அவை பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில், வானைத் தொடும் அளவுக்கு பிரமாண்டமாக கட்டப்பட்டவை ஆகும்.
இந்நிலையில், அங்குள்ள பிரசித்தி பெற்ற பல மாடிகளை கொண்ட, அடுக்குமாடி குடியிருப்புகளில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. ஒரு உயரமான கோபுரத்தில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ, மற்ற மாடிகளுக்கும் பரவியது. இந்த தீ மின்னல் வேகத்தில் பிற பிரிவுகளுக்கும் பரவி எரியத் தொடங்கியது. அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தன.
உடனடியாக ஷார்ஜா மற்றும் அஜ்மான் சிவில் பாதுகாப்பு படையினரும், தீயணைப்பு படையினரும், போலீஸ் படையினரும் அங்கு விரைந்தனர். அந்த பகுதி முழுவதும் போலீசார் சுற்றி வளைத்தனர். தீ விபத்து நடந்த அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் இருந்து மக்களை பத்திரமாக வெளியேற்றினர்.
பல மணி நேரம் போராடிய பின்னர்தான் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் இல்லை. இருப்பினும் காயமடைந்த சிலருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டது..