1,00,000 ஆண்டுகள் 'காத்திருந்து' டைட்டானிக் கப்பலை மூழ்கடித்த பனிப் பாறை!
நியூயார்க்: உலகத்தின் மிகப் பெரிய கப்பலாக கருதப்பட்ட டைட்டானிக் கப்பலை மூழ்கடித்த பனிப்பாறையின் வயது 1 லட்சம் ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 1912 ஏப்ரல் 10-ம் தேதி பிரிட்டனின் சவுத் ஹேம்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு டைட்டானிக் சொகுசு கப்பல் புறப்பட்டது. 2224 பேர் பயணம் செய்த இந்தக் கப்பல், நான்கு நாட்கள் பயணத்திற்குப் பிறகு வடக்கு அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பனிப்பாறையில் மோதி விபத்தில் சிக்கியது.
இதில் டைட்டானிக் கப்பல் முழுவதுமாக நீரில் மூழ்கியது. அந்த கப்பலில் பயணம் செய்த பயணிகள் 1500 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
டைட்டானிக்....
இந்த கப்பல் மூழ்கிய கதையை மையமாக வைத்து 1997-ல் ஹாலிவுட்டில் ‘டைட்டானிக்' என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டது. மொழிகளைக் கடந்து உலகின் பல நாடுகளிலும் திரையிடப்பட்ட இந்தப் படம் காதல் காவியங்களில் ஒன்றாக இடம் பிடித்தது.
மவுசு...
டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மிகச் சிறிய பொருட்கள் கூட இன்றளவும் லட்சக்கணக்கில் ஏலத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த அக்டோபரில் ஏலம் விடப்பட்ட ஒரு பிஸ்கட் ரூ.15 லட்சத்துக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு லட்சம் ஆண்டுகள்...
இந்நிலையில், டைட்டானிக் கப்பல் விபத்தில் சிக்க காரணமான பனிப்பாறை சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் பழமையானது என லண்டனில் உள்ள ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தில் இருக்கும் கிரண்ட் பிக் என்ற ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.
தொடக்கம்...
இது தொடர்பாக அவர் மேற்கொண்ட ஆய்வில், டைட்டானிக் கப்பலை மூழ்கடித்த பனிப்பாறையின் தொடக்கம் தென்மேற்கு கீரின்லாந்தில் உள்ளது எனவும் அது ஒரு இலட்சம் ஆண்டுகள் பழமையானது எனவும் தெரிய வந்துள்ளது.
எடை...
இந்த பனிப்பாறையின் தற்போதைய எடை 75 மில்லியன் டன்னும், உயரம் 1500 அடியாகவும் உள்ளது. ஆனால் டைட்டானிக் கப்பல் மூழ்கும் போது அதன் எடை 1.5 மில்லியன் டன்னும் அதன் உயரம் 400 அடியும் கொண்டதாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது.
மோசமான ஆண்டு...
தனது ஆய்வு குறித்து கிரண்ட் பிக் கூறுகையில், ‘1912ம் வருடத்தில் பல பனிப்பாறைகள் இருந்துள்ளன. அந்த ஆண்டு ஒரு மோசமான ஆண்டு' எனத் தெரிவித்துள்ளார்.
டைட்டானிக் 2...
இதற்கிடையே, கடலில் மூழ்கிய டைட்டானிக் சொகுசு கப்பலின் அதே வடிவமைப்பு, நேர்த்தி, அழகுடன் மீண்டும் ஒரு கப்பல் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு ‘டைட்டானிக் 2' என பெயரிடப்பட்டுள்ளது.
2018ல் முதல் பயணம்...
இந்தக் கப்பல் வரும் 2018-ம் ஆண்டில் சீனாவின் ஜியாங் சூ நகரில் இருந்து துபாய்க்கு தனது முதல் கடற்பயணத்தை தொடங்க இருப்பதாக அதை தயாரித்து வரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புளு ஸ்டார் நிறுவனத்தின் உரிமையாளரும் கோடிஸ்வரருமான கிளைவ் பால்மர் என்பவர் தெரிவித்துள்ளார்.
ரூ. 2800 கோடி செலவில்...
இந்தக் கப்பல் ரூ. 2800 கோடி செலவில் சீனாவில் உருவாக்கப்பட்டு வருகிறது. மூழ்கிய கப்பலை போன்றே 9 அடுக்குகள், 840 கேபின்களுடன் புதிய கப்பல் தயாராகிறது. இதில் 2400 பயணிகளும் 900 ஊழியர்களும் தங்க முடியும்.
லைப் போட்கள் அதிகம்...
டைட்டானிக் கப்பலைப் போலவே உருவாக்கப்படும் இந்தக் கப்பலில் டைட்டானிக் கப்பலில் இருந்ததை விட அதிக வாழ்க்கை படகுகள், அதாவது ஆபத்தில் உதவும் லைப் போட்கள் வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.