5300 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட ’ஓட்ஸி’ கடைசியாகச் சாப்பிட்டது என்ன தெரியுமா?
சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனிமனிதனின் கடைசி உணவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ்: சுமார் 5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓட்ஸி என்ற பனிமனிதனின் கடைசி உணவு என்ன என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வடக்கு இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஓட்ஸெலர் ஆல்ப்ஸ் பகுதியில் உள்ள உயரமான பகுதியில் கடந்த 1991ம் ஆண்டு பனிப்பாறைகளுக்கு நடுவே மனித உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பனி மனிதனான அந்த நபரின் உடலுக்கு ஓட்ஸி என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டனர்.
அவரது பின்புறத்தில் ஒரு அம்பு தைத்திருந்தது. அந்த அம்புத் தாக்குதலாலேயே அவர் உயிரிழந்தது உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது. அந்த அம்பானது அவருடைய தமனியைத் தாக்கியதில், சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
பதப்படுத்தப்பட்டுள்ளது:
பனிமனிதனான அவரது சடலம் பனிக்குள் புதைந்து போனதால் சுமார் 5300 ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்துள்ளது. உலகிலேயே பழமையான பதப்படுத்தப்பட்ட உடலாக ஓட்ஸியின் உடல் கருதப்படுகிறது. தற்போது இது தெற்கு டைரோல் தொல்லியல் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அம்பின் நுனி:
ஓட்ஸியின் உடலை வைத்து தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் பத்து ஆண்டுகள் கழித்து, அவரது இடது தோளில் அம்பின் நுனி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணை:
அம்பு தாக்குதலில் அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளதால், அவரைக் கொலை செய்தது யார் என்ற விசாரணையை அந்நாட்டு காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தாக்கப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஓட்ஸி மதிய உணவு சாப்பிட்டது தெரிய வந்தது.
அதிக கொழுப்பு:
ஓட்ஸி கடைசியாக ஆட்டுக் கொழுப்பு, மான் கறி, பழங்கால கோதுமை மற்றும் புதர்களில் விளையும் சில தாவரங்கள் ஆகியவற்றை உண்டது தெரியவந்துள்ளது. அந்த உணவில் தற்போதைய வழக்கமான 10%ஐ விடவும் அதிகமான கொழுப்பு இருந்துள்ளது. அதாவது அவரது உணவில் இருந்த கொழுப்பின் அளவு 50% ஆகும்.
தொடரும் விசாரணை:
சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்த பனி மனிதன் கடைசியாக சாப்பிட்ட உணவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருப்பது மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஓட்ஸியின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தாக்குதல்:
ஓட்ஸியின் வலது கையில் காயம் ஒன்று உள்ளது. இது அவர் கொல்லப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனவே, அன்றைய தாக்குதலின் தொடர்ச்சியாக, அவரது பகையாளிகள் மறைந்திருந்து பின்புறமாகத் தாக்கி ஓட்ஸியைக் கொலை செய்திருக்கலாம் என இதனை விசாரித்து வரும் அதிகாரிகள் கருதுகின்றனர்.
கொலையாளி யார்?
தாங்கள் பார்த்ததிலேயே மிகவும் பழமையான வழக்கு இது தான் எனக் கூறும் அவர்கள், சவால்கள் மிகுந்த இந்த வழக்கு சுவாரஸ்யமானதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். விரைவில் ஓட்ஸியைக் கொலை செய்த நபர் குறித்து கண்டறிவோம் என அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.