அல்பக்தாதியே இஸ்லாமியர் தலைவர்! பிற நாடுகள் மீதும் தாக்குதல் - ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல்!!
மொசூல்: கிறித்துவர்களுக்கு எப்படி போப் தலைவரோ அதேபோல் இஸ்லாமியர்களுக்கு அல் பக்தாதிதான் தலைவர் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பிரகடனம் செய்துள்ளது. அத்துடன் பிற மத்திய கிழக்கு நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப் போவதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ். மிரட்டல் விடுத்துள்ளது.
ஈராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் உள்நாட்டுப் போரை நடத்தி வருகின்றனர். இதன் உச்சகட்டமாக சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய நகரங்களை இணைத்து தனி இஸ்லாமிய நாட்டையும் பிரகடனம் செய்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ்.
அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பானது தங்களது எதிர்கால திட்டங்களையும் பிரகடனம் செய்துள்ளது. அந்த பிரகடனத்தில், சிரியா, ஈராக்கில் தங்களது ஆக்கிரமிப்பில் பகுதிகளை இணைத்து இஸ்லாமிய தேசம் என்று பிரகடனம் செய்கிறோம். இந்த இஸ்லாமிய தேசத்தின் கலீபாவாக அல் பக்தாதி இருப்பார்.
இஸ்லாமிய தேசத்தின் கலிபாவான பக்தாதியின் ஆணைப்படியே அனைத்து முஸ்லிம்கள் நாடுகளும் செயல்பட வேண்டும். அவரது ஆணைக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
உலகளாவிய இஸ்லாமிய தேசத்தை கட்டமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது முன்பு ஒட்டமான் துருக்கி பேரரசு அமைந்ததைப் போல மத்திய கிழக்கு நாடுகள், வடக்கு ஆப்பிரிக்கா, பால்கன் நாடுகள், ஆசியாவின் பெரும்பகுதியில் தங்களது இஸ்லாமிய தேசத்தை விரிவாக்கம் செய்யவும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டுள்ளது.