பாக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஐஎஸ் தீவிரவாத அமைப்பு.. புதிய தலைவர் நியமனம்
தெஹ்ரான், ஈரான்: அமெரிக்க ராணுவத்தால் தங்கள் தலைவன் அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதை ஐஎஸ் தீவிரவாத அமைப்பு உறுதி செய்துள்ளது. பாக்தாதி கொல்லப்பட்டதை அடுத்து புதிய தலைவராக இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ராணுவத்தின் கே-9 டாக்ஸ் படை ஹெலிகாப்டர்கள் மோப்ப நாய் சகிதமாக சென்று கடந்த ஞாயிற்றுக்கிமை அன்று ஐஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் பாக்தாதியை வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள பரிஷா என்ற கிராமத்தில் கொன்றது.
இந்த தகவலை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக உலகிற்கு சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அத்துடன் பாக்தாதியை கொல்ல உதவிய மோப்ப நாயின் புகைப்படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க ராணுவத்தால் அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செய்தி நிறுவனமான அமக் ஆடியோ டேப்பில் உறுதி செய்துள்ளது. பாக்தாதி கொல்லப்பட்டதை அடுத்து புதிய தலைவராக இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷி நியமனம் செய்யப்பட்டுள்ளதை சிரியாவில் உள்ள சன்னி முஸ்லீம் குழுவின் செய்தி தொடர்பாளர் அபு அல் ஹசன் அல் முஹாஜீர் உறுதிபடுத்தி உள்ளார்.