மண்டேலாவுக்கு ரகசியமாக பேத்தியைக் காண்பித்த சிறை அதிகாரி கிறிஸ்டோ...
கேப்டவுன்: மண்டேலா தனது சிறைவாசத்தில் பெரும்பகுதியைக் கழித்த சிறையில் பணிபுரிந்தவரும், பின்னாளில் அவரது நண்பராக திகழ்ந்தவருமான கிறிஸ்டோ பிராண்ட் என்பவர், மண்டேலா குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அங்கு சிறையில் பணியாற்றி வந்த கிறிஸ்டோ பிராண்ட் என்பவர், மண்டேலாவுடன் நீண்ட காலம் சிறையில் பழகி வந்தார். அப்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக, மண்டேலாவுக்காக பிரெட் உள்ளிட்டவற்றை யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து கொடுப்பாராம் பிராண்ட்.
பிராண்ட் ஒரு வெள்ளையர் என்பது குறிப்பிடத்தக்கது. நிறவெறிக் கொடுமையாளர்களால் மண்டேலா சிறைவாசத்தை அனுபவித்து வந்த நிலையில் அவருக்கு சிறையின் ஜெயிலரான வெள்ளையர் நல்ல நண்பராக இருந்தது ஆச்சரியமானது.
மண்டேலாவின் மரணத்தால் பிராண்ட் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளார். மண்டேலாவுடனான தனது நட்பு குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
மண்டேலாவின் சிறைவாசம்....
தற்போது 50 வயதைத் தாண்டியவர் பிராண்ட். அவர் ராபன் தீவில் ஜெயிலராக பணியாற்றினார். அங்குதான் தனது 27 ஆண்டு கால சிறை வாழ்க்கையின் 18 வருடங்களைக் கழித்தார் மண்டேலா.
வயது வித்தியாசம்...
ராபன் தீவில் பிராண்ட் பணியைத் தொடங்கியபோது அவருக்கு வயது 18. மண்டேலாவுக்கு 60 வயதாகும்.
சந்தோஷ சந்திப்பு....
2 வருடங்களுக்கு முன்பு தனது மனைவி, மகன், பேரனுடன் கேப்டவுனுக்கு வந்துள்ளார் பிராண்ட். அப்போது மண்டேலாவைப் பார்த்து மகிழ்ந்தார். பிராண்ட்டின் பேரனை தூக்கிக் கொஞ்சி மண்டேலாவும் மகிழ்ந்துள்ளார். 3 மணி நேரம் இந்த சந்தோஷச் சந்திப்பு நடந்ததாம்.
அழியாத நினைவுகள்....
பிராண்ட் இதை நினைவு கூறுகையில், கடந்த காலம் குறித்து சந்தோஷமாகப் பேசி மகிழ்ந்தோம். எனது பேரனைத் தூக்க முயன்றார். அவன் வெட்கப்பட்டு ஒதுங்கினான். ஆனாலும் விடாமல் அவர் தூக்கிக் கொஞ்சினார்.
மறைவுச் செய்தி....
அவரது மறைவுச் செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெரும் சோகமடைந்து்ளேன். ஆனால் அவர் வெற்றிகரமான ஒரு மனிதர். தான் நினைத்ததை சாதித்தவர். அமைதியாக அவர் இனி உறங்கட்டும் என்றார் பிராண்ட்.
ரகசிய சந்திப்பு....
பிராண்ட், ஜெயிலராக இருந்தபோது சிறைக்குள் மண்டேலாவுக்காக பிரெட் உள்ளிட்டவற்றை ரகசியமாக கொண்டு வந்து கொடுப்பாராம். ஒருமுறை கைக்குழந்தையாக இருந்த மண்டேலாவின் பேத்தியைக் கூட ரகசியமாக கொண்டு வந்து அவரிடம் காண்பித்தாராம்.
நலம் விசாரிப்பு....
பிராண்டின் அன்பால் நெகிழ்ந்த மண்டேலா, பிராண்டை நன்றாகப் படிக்க ஊக்கப்படுத்துவாராம். அவரது குடும்பத்தினர் மீது அன்பு காட்டுவாராம். அடிக்கடி அவர்களைப் பற்றி விசாரித்தபடி இருப்பாராம்.
அந்தநாள் ஞாபகம்....
தென் ஆப்பிரிக்காவின் அதிபராக மண்டேலா ஆன பின்னர் பிராண்ட் சாதாரண சிவில் பணிக்கு மாற்றப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களைப் பார்ப்பதற்காக மண்டேலா நாடாளுமன்றம் போயிருந்தபோது அங்கு புதிய அரசியல் சாசன சட்டமசோதா நகலை எம்.பிக்களிடம் விநியோகித்துக் கொண்டிருந்தாரம் பிராண்ட். அதைப் பார்த்த மண்டேலா, பிராண்ட்டை நெருங்கி தோளைப் பற்றி இழுத்து அணைத்துக் கொண்டாராம்.
குரூப் போட்டோ....
பின்னர் அனைவர் முன்பும், இவர் யார் தெரியுமா. இவர்தான் எனது சிறை வார்டன். என்னுடைய நண்பர் என்று மகிழ்ச்சியுடன் கூறினாராம் மண்டேலா. பின்னர் அனைவரும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோது பிராண்டையும் அருகில் நிற்கச் சொல்லி நிற்க வைத்தாராம் மண்டேலா.