உன்னைக் காப்பாற்ற முடியலயே.. இப்படித்தான் ஹரம்பி வருத்தப்பட்டிருக்குமோ?
சின்சினாட்டி: ஹரம்பி.. உலகம் முழுவதும் பலரையும் வருத்தத்தில் மூழ்கடித்துள்ளது இந்தப் பெயர். ஆம், இதுதான் அமெரிக்காவின் சின்சினாட்டி விலங்கியல் பூங்காவில் அதிகாரிகளால் கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கொரில்லாவின் பெயர்.
ஒரு குழந்தையின் உயிரைக் காக்க ஹரம்பியை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் ஹரம்பிக்கு நேர்ந்த கொடூர முடிவு உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஹரம்பி அந்தக் குழந்தைக்கு ஒரு கேடும் செய்யவில்லை. மாறாக அக்குழந்தையை பரிவுடன் தூக்கியது, தனது கரங்களுக்குள் பாந்தமாக வைத்திருந்தது. கூச்சல் போட்டுக் கத்திய மனிதர்களால் குழந்தைக்கு ஆபத்து வந்து விடுமோ என்று நினைத்து அதை அரவணைத்துப் பாதுகாத்தது. தனது நெற்றிப் பொட்டில் வந்து துளைத்த துப்பாக்கித் தோட்டாவையும் கூட அது சட்டை செய்யாமல் அந்தக் குழந்தையைப் பரிவுடனேயே பார்த்தது. கண்களில் நீர் வடிய அது தனது கடைசி மூச்சை விட்ட காட்சி பலரையும் பதைபதைக்க வைத்தது.
உண்மையில் உன்னை இந்த மனிதர்களிடமிருந்து காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என்றுதான் அந்த பரிதாபத்துக்குரிய கொரில்லா நினைத்திருக்கும். இப்போது ஹரம்பியை சுட்டுக் கொன்ற செயல் பலத்த விவாதத்துக்குள்ளாகியுள்ளது. அந்தக் கொரில்லா கொஞ்சம் கூட முரட்டுத்தனத்தைக் காட்டவில்லை. மாறாக தன்னிடம் வந்து சிக்கிய குழந்தையிடம் அன்பாகவே பழகியது. அப்படிப்பட்ட நிலையில் கொல்லும் முடிவு எடுக்கப்பட்டது ஏன் என்பது பலருடைய கேள்வியாக உள்ளது.
அந்தக் கொரில்லாவுக்கு மயக்க ஊசி போட்டு மயங்க வைத்து குழந்தையை மீட்டிருக்கலாம் என்று பலரும் கூறுகின்றனர். சுட்டுக் கொல்லும் முடிவு மிகவும் மோசமானது, குரூரமானது என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். ஹரம்பிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி https://www.facebook.com/Justice4Harambe/ பேஸ்புக்கிலும் ஒரு பக்கம் திறக்கப்பட்டுள்ளது. #JusticeForHarambe என்ற வாசகமும் டிரெண்டிங்கில் உள்ளது.
ஹரம்பி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்துக்கு முதல் நாள்தான் அது தனது 17வது பிறந்த நாளை கொண்டாடியது. அதை குஷியாக கொண்டாடிய விலங்கியல் பூங்கா அதிகாரிகள்தான் அதை அடுத்த நாள் சுட்டுக் கொன்றுள்ளனர் என்பது கொடுமையானது.
சம்பந்தப்பட்ட விலங்கியல் பூங்காவில் ஹரம்பி இருந்த பகுதியில் 4 வயதுக் குழந்தை விழுந்ததும் பரபரப்பு ஏற்பட்டது. பூங்கா நிர்வாகிகள் உடனடியாக திரண்டு வந்தனர். பத்து நிமிடத்திலேயே சுட்டுக் கொல்லும் முடிவை அவர்கள் எடுத்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது.
அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இருவிதமான கருத்துக்களைக் கூறுகின்றனர். ஆனால் பலரும், அந்தக் கொரில்லா குழந்தையைப் பாதுகாப்பாகவே வைத்திருந்தது என்று கூறியுள்ளனர். சிலர்தான் கொரில்லாவால் ஆபத்து இருந்தது என்று கூறியுள்ளனர்.
ஹரம்பி கொல்லப்பட்டது சரியா.. தவறா... விவாதங்கள் தொடர்கின்றன.. சமூக வலைதளங்களில்.