முதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்!
ஜகார்தா: இந்தோனேசியாவில் அந்நாட்டு புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமான பொதுமக்கள் தங்கள் நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்ய ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
தற்போதைய அதிபரான ஜோக்கோ விடோடோ,14 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறிய நகர மேயராக அரசியல் வாழ்வினை துவக்கினார். அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோவை எதிர்த்து பிரபோவோ சுபைந்தோ களமிறங்கியுள்ளார்
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேசியாவில் அதிபரை தேர்வு செய்யவும், நாடாளுமன்றத்துக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்குமான பிரதிநிதிகளை தேர்வு செய்வது என மொத்தமாக தற்போது தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 19 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரம் பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் தேர்தல் உலகின் மிகப்பெரிய ஒற்றை நாள் தேர்தல் ஆகும்.
தேர்தலையொட்டி நாடு முழுவதும் 8 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் வகையில் வாக்குச் சீட்டில் அவரது சின்னத்தில் துளையிட்டு, வாக்குப் பெட்டியில் போட்டு விட வேண்டும். பின் அங்கு வைக்கப்பட்டுள்ள ஹலால் மை பாட்டிலில் ஒரு விரலை நனைத்து எடுக்க வேண்டும். இரண்டாவது முறையாக கள்ள ஓட்டு போடுவதை தடுக்கவே இந்த ஏற்பாடு. அதிபர், துணை அதிபர் மற்றும் தேசிய மற்றும் பிராந்திய சட்டமன்ற வேட்பாளர்கள் என வாக்காளர்களுக்கு ஐந்து காகித வாக்குகள் வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ளன.
லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெற்றிருப்பதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். சுமார் 350,000 போலீஸ் மற்றும் வீரர்கள் 1.6 மில்லியன் ராணுவ துணை அதிகாரிகளுடன் சேர்ந்து தேர்தல் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து மாதிரிகள் அடிப்படையில் அதிகாரப்பூர்வமற்ற விரைவான எண்ணிக்கைகள் வாக்களிப்பு முடிவடைந்த 1 மணி நேரத்திற்குள் வெளியிடப்படும். இதில் வென்ற அதிபர் வேட்பாளர் இன்று இரவுக்குள் அறிவிக்கப்படலாம். ஆனால் அதிகாரப்பூர்வமான முடிவுகள் மே மாதம் தான் அறிவிக்கப்படும்.
எனக்கு விரல் நடுங்கும்ல.. தண்ணி அடிச்சாதானே நடுங்காது.. அப்பத்தானே சரியா ஓட்டு போட முடியும்.. ஆஹா
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிநாடுகளில் வாழும் இந்தோனேசிய நாட்டு குடிமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அபுதாபியில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வெளிநாட்டுவாழ் இந்தோனேசியர்கள் அவர்கள் வாழும் நாட்டிலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்நாட்டை சேர்ந்த வாக்குரிமை பெற்ற சுமார் 9 ஆயிரம் பேர் தங்களது வாக்கை செலுத்தினர் வாக்களித்தவர்களுக்கு சுண்டு விரலில் அடையாள மையிடப்பட்டது.