உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியல்.! மோடிக்கு முதலிடம்.. பிரிட்டிஷ் ஹெரால்ட் அறிவிப்பு
லண்டன்: 2019ம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
இது தொடர்பாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் பிரிட்டிஷ் ஹெரால்ட் பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பில் இம்முடிவு தெரிய வந்துள்ளது.
லண்டனிலிருந்து வெளியாகி வந்து கொண்டிருக்கும் பிரபல இதழான பிரிட்டிஷ் ஹெரால்ட், 2019-ம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த தலைவராக யாரை நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை தனது வாசகர்களிடம் கேட்டு அதற்கு வாக்கெடுப்பும் நடத்தியது.
உலக தலைவர்களை பின்னுக்கு தள்ளிய மோடி
பிரிட்டிஷ் ஹெரால்ட் நடத்திய வாக்கெடுப்பில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட உலக தலைவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. வாசகர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் இறுதியில் அமெரிக்க அதிபர் ரஷ்ய அதிபர் சீன அதிபர் என அனைவரையும் பின்னுக்கு தள்ளி இந்திய பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார் உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர் மற்றும் அரசியல்வாதியாக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்
31 சதவீத வாக்குகள் பெற்ற மோடி
இந்த வாக்கெடுப்பில் 30.9% வாசகர்களின் ஆதரவை பெற்று பிரதமர் மோடி முதலிடம் பிடித்தார், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 29 % வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தையும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 21.9% வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனர். சீன அதிபர் ஜின்பிங் 18.1 % வாக்குகள் பெற்று நான்காமிடம் பிடித்தார்.
மோடிக்கு ஆதரவு ஏன்
உலகம் முழுவதுமே தற்போது வெப்பமயமாதல் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உலக வெப்பமயமாதல் காரணமாக கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பருவகால மாற்றம் தொடர்பான மோடியின் நடவடிக்கைகள் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதே மோடிக்கு வாசகர்கள் அமோக ஆதரவளிக்க காரணம் என பிரிட்டிஷ் ஹெரால்ட் கூறியுள்ளது.
ஓடிபி-ஐ பயன்படுத்திய வாசகர்கள்
மற்ற ஊடகங்கள் நடத்தும் கருத்து கணிப்புகளைப் போல இல்லாமல், பிரிட்டிஷ் ஹெரால்ட் வித்தியாசமாக கருத்துக்கணிப்புகளை எப்போதுமே நடத்தும், அந்த வகையில் பிரிட்டிஷ் ஹெரால்ட் பத்திரிகை வாசகர்கள் ஒரு முறை பெறக்கூடிய ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி (OTP)-ஐ பயன்படுத்தி வாக்களித்துள்ளனர். மேற்கண்ட கருத்துக்கணிப்புக்கான வாக்குப் பதிவின் போது, பிரிட்டிஷ் ஹெரால்ட் பத்திரிகையின் இணையதளத்தை பயன்படுத்தி ஏராளமானோர் வாக்களிக்க முயற்சித்துள்ளனர் ஆதலால் அந்த பத்திரிகையின் இணையதளமே முடங்கும் நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
முன்பக்க அட்டையில் மோடி படம்
உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளதை அடுத்து ஜூலை 15-ம் தேதி வரை பிரிட்டிஷ் ஹொரால்ட் பத்திரிகையின் முன்பக்க அட்டையில் மோடியின் படம் இடம் பெற உள்ளது. முன்னதாக மே-ஜூன் மாதத்திற்கான இப் பத்திரிகையின் முன் பக்க அட்டையில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டரன் படமும், அதற்கு முந்தைய மார்ச்-ஏப்ரல் பத்திரைகையின் முன்பக்கத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் படமும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.