போட்டோதானே இந்தா பிடிச்சுக்கோ..... உதடுகளைக் குவித்து 'லொள்ளு' போஸ் கொடுத்த பெண்!
ஓஹையோ: அமெரிக்காவில் ஒரு பெண்ணைப் போலீஸார் கைது செய்தனர். அந்தப் பெண்ணோ தான் தவறான காரணத்திற்காக கைது செய்யப்பட்டதாக கோபம் கொண்டார். போலீஸார் அவரைப் புகைப்படம் எடுக்க முயன்றபோது தனது வாயை குவித்து வைத்துக் கொண்டு வாத்து மாதிரி முகத்துடன் நூதனமாக போஸ் கொடுத்து போலீஸாரை டென்ஷனாக்கி விட்டார்.
அந்தப் பெண்ணின் பெயர் ஏஞ்செலா கிரீன். 34 வயதாகிறது. இவர் தனது காதலர் பிரையன் பேக்கர் என்பவருடன், ஓஹையோவில் உள்ள குவாலிட்டி இன் விக்கிலிப் என்ற ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது மேலும் ஒரு இரவு தான் தங்க அனுமதி வேண்டும் என்று ஹோட்டல் நிர்வாகத்திடம் அனுமதி கேட்டார். ஆனால் அவர்கள் தரவில்லை. காலி செய்யுமாறு கூறி விட்டனர்.
இதனால் கோபமடைந்த அவர் ஹோட்டல் நிர்வாகத்துடன் தகராறில் ஈடுபட்டார். அவர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் ரகளையில் ஈடுபட்ட கிரீனைக் கைது செய்வதாக அவர்கள் தெரிவித்து கைது செய்ய முயற்சித்தனர். ஆனால் போலீஸாருடனும் அப்பெண் தகராறில் ஈடுபட்டார். பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அப்பெண்ணை போலீஸார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
அங்கு போயும் அவரது ரவுசு குறையவில்லை. இந்த நிலையில் வழக்குப் பதிவுக்காக கிரீனைப் போட்டோ எடுக்க முயன்றனர் போலீஸார். அப்போது தனது முகத்தை வித்தியாசமாக வைத்துக் கொண்டு உதடுகளைக் குவித்து வாத்து போல காண்பித்தார். இப்போது எடுங்கள் போட்டோ என்றும் கோபமாக கூறியுள்ளார். இதைப் பார்த்த போலீஸாருக்கு சிரிப்பு வந்து விட்டதாம்.
இருந்தாலும் விடாமல் அதையும் போட்டோ எடுத்தனர். தற்போது தங்களது பேஸ்புக் பக்கத்திலும் இந்தப் போட்டோவை போலீஸார் போட்டுள்ளனர். இது இப்போது வைரலாக பரவியுள்ளது. போட்டோவைப் பார்த்து 182 பேர் லைக் கொடுத்துள்ளனர். 225 பேர் ஷேர் செய்துள்ளனர். 229 கமெண்டுகள் வேறு.
கிரீன் பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.