குடியிருப்பிற்கு குறி.. சவுதியை நோக்கி சீறிப்பாய்ந்த ஏவுகணைகள்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!
ரியாத்: சவுதி அரேபியாவை நோக்கி நேற்று வந்த ஏவுகணைகளை தாக்கி அழித்துவிட்டதாக அந்த நாட்டு பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
Recommended Video
ஹவுதி போராளி குழுக்களின் புரட்சியை தொடர்ந்து கடந்த 2015ல் இருந்தே ஏமனில் போர் நடந்து வருகிறது. ஏமனில் ஆட்சி நடத்தி வந்த அதிபர் அப்ட்ராப்பா மன்சூர் ஹாதி ஆட்சியை அங்கிருந்து ஹவுதி படைகள் அகற்றியது. ஆயுதபுரட்சி மூலம் அந்நாட்டு தலைநகரில் இருந்து மன்சூர் ஆட்சி அகற்றப்பட்டது.
போராளி குழுக்களான ஹவுதி படைகள் செய்த இந்த புரட்சி காரணமாக அங்கு போர் வெடித்தது. நான்தான் ஏமனின் அதிபர் என்று தொடர்ந்து மன்சூர் ஹாதி குறிப்பிட்டு வருகிறார்.
என்ன நடந்தது
இதோடு மன்சூர் ஹாதி சவுதி அரேபியாவின் உதவியையும் கோரினார். இதனால் 2015 மார்ச் 26ம் தேதி சவுதி அரேபியா தலைமையில் பெரிய அளவில் படைகள் ஏமனில் தாக்குதல் நடத்த தொடங்கியது. அங்கு இருக்கும் ஹாதி படைகளை காலி செய்யும் வகையில் ஏமனில் தாக்குதல் நடத்தியது. மேற்கு ஆசியா, வட ஆப்ரிக்கா நாடுகள் சவுதிக்கு ஆதரவாக களமிறங்கியது.
ஈரான் எதிர்பக்கம்
இன்னொரு பக்கம் சவுதிக்கு எதிர் திசையில் ஈரான் வந்தது. ஹவுதி படைகளுக்கு ஆதரவாக ஈரான் தனது படைகளை அனுப்பியது. இதனால் ஹவுதி படைகளுக்கும், சவுதி படைகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. 5 வருடமாக நடந்து வரும் இந்த போரில் சவுதி மீது அவ்வப்போது ஹவுதி படைகள் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வப்போது இந்த சண்டை மிக மோசமாக நடப்பது உண்டு.
ஏவுகணை வந்தது
இந்த நிலையில் சவுதியை நோக்கி நேற்று ஏவுகணைகள் வந்துள்ளது. ஏமனில் இருந்து ஹவுதி படைகள் ஏவிய ஏவுகணைகள் சவுதியை நோக்கி வந்துள்ளது.தெற்கு சவுதியில் இருக்கும் நகரங்களை நோக்கி இந்த ஏவுகணைகள் வந்துள்ளது. அங்கு இருக்கும் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாக்கி அழித்தது
இந்த நிலையில் வேகமாக சீறி வந்த ஏவுகணைகளை சவுதி தடுத்து அழித்தது. ஏவுகணை தடுப்பு சிஸ்டம் மூலம் அனைத்து ஹவுதி ஏவுகணைகளும் தடுத்து அழிக்கப்பட்டது. இதனால் சவுதியில் எந்த விதமான சேதங்களும் ஏற்படவில்லை. மக்கள் உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.சவுதி மீது கடந்த மே மாதத்தில் இருந்து அடிக்கடி ஏவுகணை தாக்குதல்களை ஹவுதி நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.