239 பேருடன் மாயமான மலேசிய விமானம்: ஒரு ஃபிளாஷ்பேக்
கோலாலம்பூர்: கடந்த மார்ச் மாதம் மாயமான மலேசிய விமானம் என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. 239 பேருடன் சென்ற விமானத்திற்கு என்ன ஆனது என்று தெரியாமல் உலகமே குழம்பியது. இந்நிலையில் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்தது.
இதையடுத்து விமானத்தை ஆஸ்திரேலியா தலைமையில் பல்வேறு நாடுகள் மாதக் கணக்கில் தேடி வருகின்றன.
சந்தேகம்
நீர் மூழ்கி கப்பல் மூலமும் தேடியும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இதனால் விமானம் கடலில் தான் விழுந்ததா அதுவும் தேடப்படும் இடத்தில் தான் விழுந்ததா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே விமானம் எங்கோ உள்ளதாகவும், அது எரிந்து சாம்பலாகிவிட்டதாகவும் வேறு கூறப்படுகிறது.
விமானி
நிபுணர்களோ கேப்டன் ஜாஹரி அகமது தான் தற்கொலை செய்ய விமானத்தை கடலில் விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த கேப்டன் தான் விமானத்தை வேண்டும் என்றே கடலில் மூழ்கவிட்டார் என்கிறார்கள் நிபுணர்கள்.
தற்கொலை
கேப்டன் ஜாஹரி அகமது தற்கொலை தான் செய்து கொண்டார் என்று முன்னாள் விமானியும், கிவி ஏர்லைன்ஸ் நிறுவனர்களில் ஒருவருமான இவான் வில்சன் மற்றும் ஜியாப் டெய்லரும் சேர்ந்து எழுதிய தி ட்ரூத் பிஹைண்ட் தி லாஸ் ஆப் பிளைட் 370 என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனர்கள்
விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள். அவர்கள் எங்கோ உயிருடன் இருப்பதாகவும், ஒரு நாள் வீட்டுக்கு வருவார்கள் என்றும் சீன பயணிகளின் உறவினர்கள் இன்னும் நம்புகிறார்கள்.
உறவினர்கள்
விமானத்திற்கு உண்மையில் என்ன ஆனது என மலேசிய அரசுக்கு தெரியும். ஆனால் அது உண்மையை தங்களிடம் தெரிவிக்காமல் மறைப்பதாக பயணிகளின் உறவினர்கள் கருதுகிறார்கள்.
பேட்டரி
விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட சரக்குகளில் இருந்த லித்தியம் பேட்டரிகளால் தான் அது வெடித்துச் சிதறியிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் உள்ளது.
மாயம்
நாட்கள் தான் ஓடுகின்றனவே தவிர விமானம் பற்றி உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. விமான போக்குவரத்து துறையில் மாயமான பல விமானங்களில் எம்.ஹெச். 370-ம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.