4 பெண்களுக்கு இந்த வருஷம் நோபல் கெளரவம்.. ஆனாலும் பத்தாது பாஸு!
ஸ்டாக்ஹோம்: 2020ம் ஆண்டு வருடத்துக்கான நோபல் பரிசுகளில் நான்கு பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அப்படி இருந்தும் கூட நோபல் பரிசுகளில் இன்னும் கூட அனைத்துத் தரப்பினருக்கும் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்ற குறை நீடிக்கிறது.
சர்வதேச அளவில் மிகப் பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது நோபல் பரிசு. எப்படி திரையுலகினருக்கு ஆஸ்கர் ஒரு கனவோ அப்படித்தான் பல்துறையினரின் மிகப் பெரிய கனவு நோபல். ஆனால் அது தேடி வருவதோ குறிப்பிட்ட சிலரைத்தான் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.
அவ்வளவு பெரிய மகாத்மா காந்திக்கே அமைதிக்கான பரிசைக் கொடுக்கத் தவறியதுதான் நோபல் அமைப்பு என்பதால் இந்தியர்களிடையே இந்த நோபல் பரிசுக்கு அவ்வளவு பெரிய மதிப்பெல்லாம் கிடையாது. இருப்பினும் இந்தியர்கள் யாரேனும் நோபல் பரிசைப் பெற்றால் அதை கைதட்டி பாராட்டவும், வரவேற்கவும் செய்வார்கள்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளில் நான்கு பெண்களுக்கு கெளரவம் கிடைத்துள்ளது. இது வரவேற்கத்தகுந்த ஒன்று. பெரும்பாலும் ஆணாதிக்கம் படைத்த விருதாகவே நோபல் திகழ்கிறது. பெண்களுக்கு பெரிய அளவில் அது கெளரவம் கொடுத்தது இல்லை. நோபல் விருதுகள் குறித்த ஒரு சின்ன அலசலைப் பார்ப்போமா...
ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. 58 வருட சாதனைக்கு அங்கீகாரம்
இதுவரை 931 பேர்
நோபல் பரிசுகள் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 931 பேருக்கு விருது கிடைத்துள்ளது. 28 நிறுவனங்களும் இந்த கெளரவத்தைப் பெற்றுள்ளன. இதில் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம்.. மொத்தமே 16 கருப்பர் இனத்தவர்களுக்குத்தான் இதுவரை நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆச்சரியமாக மட்டுமல்லாமல், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இந்த ஆண்டு ஒரு கருப்பருக்கும் விருது கிடைக்கவில்லை.
கருப்பர்கள் புறக்கணிப்பு
16 கருப்பர் இனத்தவரில், 12 பேர் அமைதிக்கான நோபல் வென்றவர்கள். 3 பேர் இலக்கியம் ஒருவர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்றவர்கள் ஆவர். அறிவியல் பிரிவில் இதுவரை ஒரு கருப்பர் இனத்தவர் கூட நோபல் பரிசு வென்றதில்லை என்பது ஆச்சரியமானது. யோசிக்க வைக்கிறது. ஏன் ஒருவர் கூட நோபல் குழுவின் கண்களுக்குப் புலப்படவில்லை என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.
6 சதவீத பெண்கள்
இலக்கியத்திற்கான இந்த ஆண்டு நோபல் பரிசை வென்றுள்ளார் அமெரிக்க கவிஞர் லூயிஸ் குளூக். இவரையும் சேர்த்து இதுவரை இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பெண்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. அதாவது மொத்த வெற்றியாளர்களில் இது வெறும் 6 சதவீதம்தான். அதாவது இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பெண்களின் எண்ணிக்கை வெறும் 6 சதவீதம்தான். இதுவும் இடிக்கிறது.
இலக்கிய நோபல்
அதை விட கொடுமை என்னன்னா, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற கருப்பர் இனப் பெண்களின் எண்ணிக்கை வெறும் 2 சதவீதம்தான். ஏன் கருப்பர் இனத்தவர்களில் நல்ல கவிதை, கதை, இலக்கியம் படைக்கும் யாருமே இவர்களின் கண்ணில் படவில்லையா என்ற கோபக் கேள்விதான் எழுகிறது.
நாடு, மொழி பாரபட்சம்
நோபல் பரிசை நிறுவியவரான மறைந்த ஆல்பிரட் நோபல் எழுதி வைத்துள்ள உயிலில், எந்த நாட்டையும் மையப்படுத்தி பரிசு தரக் கூடாது. நாடு, மொழி பாரபட்சமில்லாமல் பரிசுகள் தரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் நடைமுறையில் என்ன காமெடி நடக்கிறது என்றால், ஆங்கிலத்திற்குத்தான் அதிக அளவிலான இலக்கிய நோபல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது என்பதுதான். ஏன் தமிழில் யாருமே தரமான இலக்கியம் படைப்பதில்லையா, மலையாளத்தில் இல்லையா என்று நமக்கும் கேள்விகள் நிறையவே எழுகின்றன. ஆப்பிரிக்கர்கள் யாருமே தரமாக எழுதுவதில்லையா என்ற கோபமும் கொப்பளித்து கிளம்புகிறது.
லூயிஸை விட சிறந்தவர்கள் இல்லையா
தற்போது லூயிஸ் க்ளூக்குக்குக் கொடுக்கப்பட்டதும் கூட லேசான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கருப்பர் இனத்தைச் சேர்ந்த சோனியா சான்செஸ், அமிரி பராகா, ரீடா டோவ் போன்றோரெல்லாம் லூயிஸை விட சிறப்பான படைப்புகளைக் கொடுத்திருப்பவர்கள். ஆனால் அவர்களுக்கு ஏன் அங்கீகாரம் தரப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அது சரி.. நம்ம ஊர் கமலா தாஸ் கூடத்தான் சிறப்பான படைப்புகளை கொடுத்தவர். அவருக்கே கிடைக்கலையே.
சர்வதேச பார்வை இல்லையே
நோபல் பரிசு என்பது சர்வதேச அளவிலானது என்றால் அதைப் பெறுவோரும் சர்வதேச அளவில் வியாபித்திருக்க வேண்டும். மாறாக குறிப்பிட்ட சிலருக்கே தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால் அது பாரபட்சமானது என்று மட்டுமே அறியப்படும். அதன் மதிப்பு குறைந்து போய் விடும். சர்வதேசத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் பரிசுகளை அளிக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாகவும் உள்ளது.
50 வருஷத்துக்கு சொல்லக் கூடாது
ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு.. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் ஏன் அதற்குப் பரிந்துரைக்கப்பட்டார்கள், ஏன் நிராகரிக்கப்பட்டார்கள் என்ற விவரத்தை 50 வருடத்துக்கு வெளிப்படுத்தக் கூடாது என்று விதி உள்ளதாம்.. எனவேதான் அதுகுறித்த தகவல் உடனடியாக வெளியாவதில்லை. 50 வருஷம் காத்திருக்க வேண்டுமாம்.. அடி ஆத்தீ.. இது வேறயா!