டெய்லி ‘அதுதான்’ சாப்டுறேன், நல்லாத் தானே இருக்கேன்... சவால் விடும் உலகின் வயதான பாட்டி!
நியூயார்க்: தினமும் காலை உணவாக பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சியையே சாப்பிடுவதாகவும், ஆனால் ஆரோக்கியமாக இருப்பதாவும் தெரிவித்துள்ளார் உலகின் மூத்த பெண்மணி எனக் கருதப்படும் சூசானா.
பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி உள்ளிட்ட பாக்கெட் உணவுகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. புற்றுநோய் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் இவ்வாறு உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தக் கருத்து முற்றிலும் தவறானது எனத் தெரிவித்துள்ளார் உலகின் மூத்த பெண்மணியாகக் கருதப்படும் சூசானா. அமெரிக்காவில் வசித்து வரும் சூசானாவிற்கு தற்போது 116 வயதாகிறது.
இவர் தினந்தோறும் காலை உணவாக பதப்படுத்த பன்றி இறைச்சி வகையான பேக்கன்களையே சாப்பிட்டு வருகிறாராம். ஆனால் தான் ஆரோக்கியமாக வாழ்வதாகவும், உலக சுகாதார நிறுவனம் கூறுவது போல் நோய்த் தாக்குதல் எதுவும் தனக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர் தனது நீண்ட ஆயுளுக்கு காரணமாக, திருமண பந்தத்தில் நீடிக்காததும், குழந்தைகள் பெற்றுக் கொள்ளாததும்தான் எனக் கூறுகிறார்.