ஏரோ 3 ஏவுகணையின் செயல்பாடு மிகச்சிறப்பாக உள்ளது.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பெருமிதம்
அலாஸ்கா: இஸ்ரேல் நாடு ஏரோ 3 என்ற தொலைதூர ஏவுகணையை அமெரிக்காவில் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
அலாஸ்காவின் கோடியாக்கில் உள்ள பசிபிக் ஸ்பேஸ்போர்ட் காம்ப்ளக்ஸ்-அலாஸ்காவில் நீண்ட தூர ஏரோ 3 ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் பரிசோதித்துள்ளன.
முன்னதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தயாரிப்பான ஏரோ என்ற ஏவுகணை முதல் முறையாக டந்த 2015-ம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது. பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் மேற்கண்ட ஏவுகணை இஸ்ரேல் ராணுவத்தில் இணைக்கப்பட்டது. தற்போது அந்த ஏவுகணையை மேலும் மேம்படுத்தி, வெற்றிகரமாக பரிசோதித்துள்ளன இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா.
1,000 கிமீ பாய்ந்து சென்று இலக்கை தாக்கும் ஏவுகணையை கடந்த வாரம் ஈரான் சோதனை செய்ததாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்நிலையில் தான் அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெற்ற ஏரோ 3 ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளது.
ஏரோ 3 ஏவுகணை தாக்க வரும் எதிரி நாட்டு ஏவுகணையை நடுவானிலேயே வழிமறித்து அழிக்கும் திறன் பெற்றதாகும். தங்களது கூட்டாளியான அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில ஏவுகணையின் செயல்பாடு மிக சிறப்பாக இருந்ததாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களில் ரகசியமாக 3 சோதனைகள் நடத்தப்பட்டது. ஈரான் அல்லது எந்த நாட்டிலிருந்து ஏவுகணையை கொண்டு தாக்கினாலும் அதனை இடைமறித்து அழிக்கும் ஆற்றல் தற்போது தங்களிடம் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
ஈரானால் உருவாக்கப்பட்ட மேம்பட்ட ஏவுகணைகளுக்கு எதிராகவும், இஸ்ரேல் எதிர்கொள்ளக்கூடிய எதிர்கால அச்சுறுத்தல்களை போக்கவும் ஏரோ 3 ஏவுகணை சோதிக்கப்பட்டது.
ஈரான் தனது அணுசக்தி திட்டம் மற்றும் அதன் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் இரண்டிலும் சர்வதேச எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.