அரபு நாடுகளின் அறிவிப்பால் கத்தார் வாழ் இந்தியர்களுக்கு பாதிப்பா?
அரபு நாடுகளில் அண்மைக்காலமாக நிகழும் அரசியல் குழப்பங்களால் கத்தார் வாழ் இந்தியர்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம் என்று அரபு நாட்டு விவகாரங்களை கவனிக்கும் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
அபுதாபி: அரபு நாடுகளின் திடீர் நடவடிக்கையால் கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து அச்சம் அடைய தேவை இல்லை என்று வெளிநாட்டு விவகாரங்களை கையாளும் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
கத்தார் நாட்டுடனான தூதரக உறவை அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன் ஆகிய 5 நாடுகள் அண்மையில் திடீரென துண்டித்தன. தீவிரவாத செயல்களுக்கு துணை போகும் வகையில் கருத்துகளை தெரிவித்தமைக்காகவும், அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் செயல்பட்டு வருவதற்காகவும் கத்தார் மீது இந்த நடவடிக்கையை மேற்கண்ட 5 அரபு நாடுகள் எடுத்துள்ளன.
அமீரகத்தில் தங்கியிருக்கும் கத்தார் நாட்டை சேர்ந்தவர்கள் 14 நாட்களுக்குள் நாடு திரும்பவும், தூதரக அதிகாரிகள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் கத்தார் நாட்டு விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
26 லட்சம் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாட்டில் சுமார் 7 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் எரிவாயு நிறுவனம் மற்றும் கட்டுமான துறையில் பணியாற்றி வருபவர்கள். வரும் 2022-ம் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காகவும் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
மிகப்பெரிய வர்த்தக கூட்டணி நாடு
சுமார் ரூ.58 ஆயிரம் கோடி வர்த்தகத்துடன் கத்தார், இந்தியாவின் 19 வது பெரிய வர்த்தக கூட்டணி நாடாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு பாதிப்பா?
கத்தார் மீது அரபு நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கையின் காரணமாக இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றி பெட்ரோநெட்டின் நிதித் தலைவர் ஆர்.கே. கார்க் செய்தியாளர்களிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் இல்லை என்று பதிலளித்துள்ளார்.
நேரடி எரிவாயு கிடைக்கிறது
மேலும் அவர் கூறுகையில், "இதில் எந்த வித தாக்கமும் ஏற்படும் என்று நினைக்கவில்லை. நமக்கு கத்தாரில் இருந்து நேரடியாக எரிவாயு கிடைக்கிறது. எனவே எரிவாயு-எரிசக்தி இறக்குமதி உடனடியாக பாதிக் கும் வாய்ப்பில்லை" என்றார்.
இந்தியர்களுக்கு அச்சம் வேண்டாம்
மத்திய அபிவிருத்தி ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரி இருதயராஜன் கூறுகையில், "கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் அச்சம் அடைய தேவையில்லை. அங்குள்ள இந்தியர் களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையால் நிச்சயம் தெற்காசிய நாட்டவர்களுக்கு கத்தாரில் எதிர்கால பலன்களே அதிகம்" என்றார்.
தோகா சென்றால் சிக்கல்
அதே நேரம், கத்தார் விமானங்கள் தங்களது நாட்டுக்குள் நுழைய தடை விதித்து இருப்பதால் கத்தார் தலைநகர் தோகாவை மையமாக வைத்து மற்ற அரபு நாடுகளுக்கு விமான பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
எண்ணெய் விலை அதிகரிக்கும்
வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த திடீர் நெருக்கடி காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெயின் விலை அதிகரிக்கும் எனபொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.