ஹிஜாப் போராட்டத்தில் உயிரிழந்த பெண்.. பிணத்தை கூட திருடி சென்ற.. ஈரான் பாதுகாப்பு படையினர்
தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த போராட்டங்களில் பங்கேற்பவர்கள் மீது சரமாரியான தாக்குதல் நடத்தப்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 17 வயது இளம் பெண் உயிரற்ற உடலாக மீட்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த உடலையும் பாதுகாப்புப் படையினர் உறவினர்களிடமிருந்து பறித்து வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்துள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஓட்டலில் ஹிஜாப் இன்றி சாப்பிட்ட பெண்.. சித்ரவதை சிறையில் அடைப்பு.. ஈரானில் தொடரும் கொடூரம்-பதற்றம்
போராட்டம்
ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஒரு முகம் இருக்கும். ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தின் முகம்தான் மாஷா அமினி. 22 வயது இளம்பெண்ணான மாஷா அமினியை அந்நாட்டு 'கலாச்சார காவலர்கள்' தாக்கி கொலை செய்ததாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஹிஜாபை சரியாக அணியாததுதான் இந்த தாக்குதலுக்கு காரணம். ஏற்கெனவே இந்த கட்டுப்பாடுகளால் பெண்கள் பலர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அமினியின் மரணம் பெண்களை போராட்டக் களம் நோக்கி தள்ளியிருக்கிறது.
அறிவுரை
இந்த போராட்டங்களில் பங்கேற்பவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்துவதாக மக்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிப்பதை தடுக்க பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களை பிரயோகிக்கக் கூடாது என ஐநா வலியுறுத்தியிருந்தது. ஆனால் இதனை அவர்கள் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.
உயிரிழப்பு
இவ்வாறு இருக்கையில் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்த 17 வயது இளம் பெண் ஒருவர் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளார். நிகா ஷகராமி என்று அழைக்கப்படும் இப்பெண்ணை அவர்களது குடும்பத்தினர் தேடாத இடம் இல்லை. இறுதியாக அவர் தெஹ்ரானில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார். இதனையடுத்து அவரது உடல் காவல்துறை வசம் உள்ள ஒரு பிணவறையிலிருந்து பெற்றோர்கள் கண்டுபிடித்தனர்.
கட்டுப்பாடுகள்
பின்னர் நிகா ஷகராமியின் சொந்த ஊரான கொராமாபாத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து நிகா ஷகராமியின் பெற்றோர் கூறுகையில், "நாங்கள் அவளை கண்டுபிடிக்க கடுமையாக போராடினோம். இறுதியாக பிணமாகதான் அவள் மீட்கப்பட்டாள். உயிரிழந்திருப்பது அவள்தான் என்பதை உறுதி செய்ய அவளது முகத்தை மட்டுமே பாதுகாப்பு அதிகாரிகள் எங்களிடம் காட்டினார்கள். அவளது உடலில் ஏதேனும் காயங்கள் இருக்கிறதா என்று கூட நாங்கள் பார்க்க அனுமதிக்கப்படவில்லை." என்று கூறியுள்ளனர்.
பிணம் திருட்டு
ஒரு வழியாக தனது மகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்த குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்ய திட்டமிட்டிருந்தள நிலையில், பாதுகாப்புப் படை அதிகாரிகள் அந்த உடலை திருடி சென்று கொராமாபாத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள மற்றொரு பகுதியில் அடக்கம் செய்துள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இளம்பெண்ணின் கல்லறை அருகே கூடிய மக்கள் ஈரான் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
கொலை?
நிகா ஷகராமி உயிரிழப்பதற்கு முன்னர் அவளது நண்பருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், தன்னை பாதுகாப்புப் படையை சேர்ந்தவர்கள் துரத்துவதாக கூறியுள்ளார். இதனை குறிப்பிட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள நிகாவின் உறவினர்கள் பாதுகாப்புப் படையினர்தான் தனது மகளை கொண்றுவிட்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
போராட்டம் தொடங்கியதற்கு ஒருவர் மட்டுமே காரணமாக இருந்தாலும், போராட்டத்தில் உயிரிழக்கும் ஒவ்வொருவருமே அந்த போராட்டத்தின் முகம்தான்.