மகிழ்ச்சி.. இந்தியாவில் இனி எப்போதும் நெட் நியூட்ராலிட்டி.. தொலைத் தொடர்பு ஆணையம் அதிரடி!
நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணைய சமநிலைக்கு ஆதரவாக இந்திய தொலைத் தொடர்பு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நியூயார்க்: நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணைய சமநிலைக்கு ஆதரவாக இந்திய தொலைத் தொடர்பு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இணைய சமநிலைக்கு எதிராக எந்த மாற்றமும், சட்டமும் கொண்டு வரப்போவதில்லை என்று கூறியுள்ளது.ஏற்கனவே பலமுறை உலகம் முழுக்க இந்த இணைய சமநிலைக்கு பிரச்சனை உருவாகி இருக்கிறது. கடந்த 2016ல் கூட இந்தியா முழுக்க இதுகுறித்த விவாதம் எழுந்தது.
அதன்பின் பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் இணைய சமநிலைக்கு எதிராக செயல்பட முடிவெடுத்து காய் நகர்த்தி பார்த்தது. மொத்த உலகத்தின் வளர்ச்சியையும், சமத்துவத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் இணைய சமநிலைக்கு எதிராக சில அறிவிப்புகள் வெளியாக இருந்தது. ஆனால் இப்போது இந்தியா இணைய சமநிலைக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
நெட் நியூட்ராலிட்டி என்றால் என்ன
நாம் பயன்படுத்தும் இணையதளங்கள் அனைத்திற்கும் ஒன்றாகவே பணம் கட்டுகிறோம். 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து நெட் பயன்படுத்தினால், நாம் அனைத்து இணையதளங்களையும் பார்க்க முடியும். ஒரே வேகத்தில் பயன்படுத்த முடியும். இதுதான் இணைய சமநிலை. இதற்கு எதிராக சட்ட திருத்தம் கொண்ட வரப்பட இருப்பதாக 2 வருடங்களுக்கு முன் பிரச்சனை எழுந்தது.
பிரச்சனை என்ன
ஒருவேளை இணைய சமநிலை மட்டும் இல்லையென்றால், பல பிரச்சனைகள் ஏற்படும். எப்போதும் போல 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், நம்மால் எல்லா இணையதளங்களையும் பார்க்க முடியாது. சில இணையதளங்களை மட்டுமே இயக்க முடியும். பல இணையதளங்களின் வேகம் பெரிய அளவில் குறையும். ஒவ்வொரு இணையதள செயலுக்கும் தனியாக பணம் கட்ட வேண்டி இருக்கும்.
எப்போதும் சமநிலை
இந்த நிலையில் இந்தியாவில் எப்போதும் போல இணைய சமநிலை தொடரும் என்று தொலைத் தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. எந்த ஒரு பெரிய நிறுவனத்தின் பேச்சையும் இதில் கேட்க போவதில்லை என்று தொலைத் தொடர்பு ஆணையம் கூறியுள்ளது. இந்தியாவில் இணைய சமநிலைக்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பேஸ்புக் பெரிய அளவில் முயற்சி எடுத்து தோல்வி அடைத்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற நாடுகளில் எப்படி
அமெரிக்காவில் தற்போது இதற்கு எதிராக இணைய சமநிலை சட்டத்தில் சிறிய திருத்தம் கொண்டு வரப்பட இருக்கிறது. சீனாவில் அவர்களுக்கு என்று இணைய விதிகளுக்கு சட்டம் இருக்கிறது. கனடாவில் இந்தியாவை விட அதிக அளவு இணைய சுதந்திரம் நிலவி வருகிறது. பெரும்பாலான ஆசிய நாடுகளில் இணைய சமநிலை முறையாக பேணப்படுகிறது.