அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்சிக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் ஒரு திருநங்கை
நியூயார்க்: அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு ஏஜென்சிக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் திருநங்கை என்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தின் ஃபோர்ட் மீடில் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் தலைமையகம் உள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று பெண் வேடத்தில் இருந்த 2 ஆண்கள் ஒரு காரில் தேசிய பாதுகாப்பு ஏஜென்சிக்குள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களின் காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது அவர்கள் வாகனத்தை வேகமாக இயக்கி கேட்டில் மோதினர்.
மேலும் அவர்களை அங்கிருந்து தப்பிச் செல்லவிடாமல் சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்ட போலீஸ் வாகனத்தின் மீதும் அவர்கள் தங்கள் காரை மோதினர். இதில் ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து போலீசார் அந்த காரை நோக்கி சுட்டதில் வாகனத்தை ஓட்டிய ரிக்கி ஹால் என்பவர் பலியானார், மற்றொருவர் காயம் அடைந்தார்.
விசாரணையில் ஹால் ஒரு திருநங்கை என்பது தெரிய வந்துள்ளது. முன்னதாக 60 வயது நபர் ஒருவர் ஹால் மற்றும் பிளெமிங் ஆகியோரை தனது காரில் ஹோவர் கவுன்ட்டியில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பார்ட்டி கொடுத்துள்ளார். அந்த பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த 60 வயது நபர் கழிவறைக்கு சென்ற நேரத்தில் திருநங்கையான ஹாலும், பிளெமிங்கும் அவரின் காரை திருடிக் கொண்டு தேசிய பாதுகாப்பு ஏஜென்சி தலைமையகத்திற்குள் நுழைய முயன்றுள்ளார்.
ஹால் மீது கொள்ளை, தாக்குதல், பிறரை தாக்கும் நோக்கத்தோடு ஆயுதம் வைத்திருந்தது, விபச்சாரம் செய்தது என்று பல வழக்குகள் உள்ளது. 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருட்டு வழக்கில் கைதான ஹால் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் 3 ஆண்டுகள் போலீசாரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இனி தான் எந்த குற்றச் செயலிலும் ஈடுபட மாட்டேன் என்று நீதிமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளார். ஆனால் அதையும் மீறி நடந்துள்ளார்.