நீதித்துறை அரசியல் மயமானதால் சர்வதேச நீதிபதிகள் விசாரணையை ஐ.நா. வலியுறுத்தியது: மனித உரிமை ஆணையர்
கொழும்பு: இலங்கையில் நீதித்துறை அரசியல் மயமானதால் தான் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ள சர்வதேச நீதிபதிகள் விசாரணையை ஐ.நா. வலியுறுத்தியது என்று அதன் மனித உரிமை ஆணையர் ஜெயித் ராத் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையர் ஜெயித் ராத் அல் ஹுசேன் இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்தார். அப்போது இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை நடவடிக்கை பற்றி கேட்டு அறிந்தார்.
அதன் பின்னர் கொழும்புவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியுள்ளதாவது: ஐநா மனித உரிமைக் கவுன்சில் கடந்த அக்டோபர் மாதம் இலங்கை குறித்து நிறைவேற்றிய தீர்மானம் பற்றிய தவறான புரிதல்களும் காணப்படுவதாகக் கூறிய அல் ஹுசேன், அந்தத் தீர்மானம், இலங்கையின் இறையாண்மையிலோ அல்லது சுதந்திரத்திலோ தேவையற்ற வகையில் தலையிடும் ஒரு முயற்சியல்ல என்றார்.
இலங்கை அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது, அதன் பலவீனத்தைக் காட்டவில்லை, மாறாக ,அதன் பலத்தையே காட்டியது என்றார். அத்தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொண்ட அந்த நிகழ்வு, தனது கடந்த கால சம்பவங்களை நேர்மையுடன் எதிர்கொண்டு அது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க இலங்கை எடுத்துக்கொண்ட உறுதிப்பாடாகவே கருதப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் பல திறமையான நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் இருந்து, பல ஆண்டுகளாக நீதித்துறை அரசியல் மயமாக்கப்பட்டுவிட்டது என்றார் அவர். கடந்த பல ஆண்டுகளாக, இலங்கையின் வரலாற்றில் பல நீதித்துறை தோல்விகள் ஏற்பட்டிருக்கின்றன. இதை இலங்கைப் பிரதமரே வெளிப்படையாக கடந்த ஜனவரி 27-ம் தேதி நடந்த நாடாளுமன்ற விவாதத்தில் குறிப்பிட்டதாக அவர் கூறினார்.
உலக நாடுகள் இலங்கை ஒரு வெற்றிகரமான நாடாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறது. இலங்கையில் நீடித்த அமைதியை உருவாக்கக் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை இப்போது உலகம் கண்டிருக்கிறது என்றார். எனவே தான் கடந்த அக்டோபரில் இலங்கை குறித்த அந்த தீர்மானத்தை மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்ற உலக நாடுகள் ஆதரவு தெரிவித்தன என்றார்.
மேலும் கடந்த தேர்தலில் இலங்கை மக்கள் மாற்றத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் ஆதரவாக வாக்களித்தனர் என்று கூறிய அல் ஹுசேன், சிறுபான்மை தீவிரவாதக் குரல்கள் அச்சத்தை உருவாக்கி நிலைமையை குழப்புவதில் வெற்றி கண்டால் அது பெரும் அவமானகரமானதாகிவிடும்.
அரசு மாற்றங்களை உருவாக்க தேவையான மன உறுதியைக் காட்டியிருக்கிறது. ஆனால் இலங்கையின் வடக்கு, கிழக்கு, கொழும்பின் தெற்கு பகுதியில் அச்சமான சூழ்நிலை நிலவி வருவதை தான் பார்த்ததாக ஹுசேன் கூறியுள்ளார்.