வர்த்தக போர்... சீனாவிலிருந்து பேருந்துகள், கார்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை?
நியூயார்க்: சீனாவிலிருந்து கார்கள் மற்றும் குறிப்பிட்ட சில வாகனங்களை இறக்குமதி செய்வதை தடை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 25 சதவீதம் வரை கூடுதல் வரியை அமெரிக்கா விதித்ததை அடுத்து சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரியை உயர்த்தியது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த வர்த்தக போர் உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது.
மே மாதம் அமெரிக்காவில் வரி உயர்விற்கு பிறகு இரண்டு நாடுகளின் பேச்சுவார்த்தையில் பலன் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், தடம் மாறியுள்ளது. சீனாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவேய் நிறுவனம் தகவல் திருட்டில் ஈடுபடுவதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் அமெரிக்கா, அந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைக்கவும் முடிவு செய்துள்ளது.
மேலும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பேருந்துகள் மற்றும் குறிப்பிட்ட சில கார்களைத் தடை செய்யவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக இந்த தடை விதிக்கப்பட உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, சீனா தன்னுடைய வாக்குறுதியிலிருந்து தவறியது என குற்றம் சாட்டி 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்கள் மீதான வரியை டிரம்ப் உயர்த்திய பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு நின்றது.
சீனாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் இணையப்போவதாக நினைத்த அனைவருக்கும் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவும் தன் பங்குக்கு தங்களுடைய வரியை உயர்த்தி வருகிறது.