கொரோனா அச்சம்.. சீனாவிற்கு ஸ்பெஷல் விமானத்தை அனுப்பிய டிரம்ப்.. தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்!
பெய்ஜிங்: சீனாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை, தனி விமானம் மூலம் அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர். அமெரிக்க அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தாக்குவதை தடுக்கும் வகையில் இதை செய்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்களுக்கு இதுவரை என்னவென்றே தெரியாத, புதிய வைரஸ் ஒன்று சீனாவில் மக்களை தாக்கி வருகிறது. உலகம் முழுக்க தற்போது சீனாவின் கொரோனா வைரஸ் காரணமாக மாபெரும் அச்சம் நிலவி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 52 பேர் பலியாகி உள்ளனர்.
2000 பேர் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சீனாவின் வுஹன் பகுதியில்தான் இந்த கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. தற்போது மத்திய சீனா, ஹாங்காங் பகுதியில் இந்த வைரஸ் பரவி வருகிறது.
முடிந்ததை செய்துவிட்டோம்.. கட்டுப்படுத்த முடியவில்லை.. கொரோனாவிற்கு எதிராக கைவிரித்த சீன அதிபர்!
எப்படிப்பட்ட வைரஸ்
இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக லேசான ஜலதோஷம் ஏற்படும். அதன்பின் குளிர் நடுக்கம் ஏற்படும். பின் இது நெஞ்சு வலியை உருவாக்கும். கடைசியில் இது மொத்தமாக உயிரையே குடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஆட்கொல்லி நோய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா வைரஸ் புதிய வகை வைரஸ் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். கொரோனா வைரஸின் வேறு ஒரு வகை சார்ஸ் நோயை சீனாவில் உண்டாக்கியது.
அமெரிக்கா வைரஸ்
சீனா தாக்கி அங்கு மக்களை பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவையும் தாக்கி உள்ளது. ஆம் அமெரிக்காவில் இந்த கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நபர் சிகிச்சைக்கு சேர்ந்து இருக்கிறார். இவர் கடந்த டிசம்பரில் சீனா சென்று வந்தார். அதன்பின் அவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. அதன்பின் அமெரிக்காவில் மூன்று பேருக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா அதிகாரிகள்
இதனால் சீனாவில் இருந்து வரும் விமானங்களை அமெரிக்கா மிக தீவிரமாக சோதனை செய்து வருகிறது. அமெரிக்காவிற்கு வரும் மக்களுக்கு கொரோனா தாக்குதல் இருக்கிறதா என்று கடுமையாக சோதனைகள் செய்து வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக, தற்போது அமெரிக்காவின் தூதரக அதிகாரிகளை சீனாவில் இருந்து அதிபர் டிரம்ப் திரும்ப பெற்றுள்ளார். அவர்களுக்கு நோய் தாக்குதல் ஏற்பட கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது.
விமானம் சென்றது
இதற்காக தனி விமானத்தை டிரம்ப் அனுப்பி உள்ளார். ஆம், அமெரிக்காவில் இருந்து ஸ்பெஷல் விமானம் மூலம் இந்த அமெரிக்கா அதிகாரிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களை அமெரிக்க மருத்துவர்கள் தீவிரமாக பரிசோதனை செய்து வருகிறார்கள். சீனாவில் வைரஸ் பாதிப்பு போகும் இவர்கள் அந்நாட்டிற்கு செல்ல மாட்டார்கள். சீனாவில் இருந்து இதே போல் வேறு சில நாடுகளும் தங்கள் தூதரக அதிகாரிகளை வெளியே அழைத்து செல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள்.