மதுவால் வருடத்திற்கு 33 லட்சம் பேர் சாவு: உலக சுகாதார அமைப்பு
ஜெனிவா: மது குடிப்பதால் ஒவ்வொரு வருடமும் 33 லட்சம் பேர் இறப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ், காசநோய், வன்முறை ஆகியவற்றால் இறப்பவர்களை விட மதுவால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மது அருந்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க,அதிகரிக்க இந்த எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
மரணத்தின் காரணம்:
உலக அளவில் நிகழும் 20 மரணங்களில் ஒரு மரணம் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, மது குடித்து வன்முறையில் ஈடுபடுவது, அத்துமீறல் மற்றும் பல தரப்பட்ட வியாதிகள் ஆகியவற்றால் ஏற்படுவதாக ஐ.நா.வின் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு:
இது பத்து வினாடிகளுக்கு ஒரு மரணம் என்ற விகிதத்தில் மாறியுள்ளதாக உலக சுகாதார மையத்தின் மன ஆரோக்கிய துறை தலைவரான சேகர் சக்சேனா கூறியுள்ளார்.
இந்தியாவில் கம்மியாம்:
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்தியாவிலும், சீனாவிலும் குறைவான அளவில் மது அருந்தப்படுவதாக இந்த அறிக்கை கூறுவதுதான்.
அதிகரித்த வசதிகள்:
மேலும், இந்த நாடுகளை சார்ந்தவர்களின் வசதி வாய்ப்புகள் அதிகரித்துவிட்டதால் தற்போது இவர்கள் அதிகமாக குடிக்கத் துவங்கிவிட்டதாகவும் உலக சுகாதார மையத்தின் அறிக்கை கூறுகிறது.
தமிழக 'டாஸ்மாக்' அரசுக்கு இது தெரியுமா?