பிரிட்டனில் ஆட்சி அமைக்கப்போவது யார்? இங்கிலாந்து ராணி எலிசபத்தை சந்தித்தார் தெரசா மே!
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் அரசு அமைப்பதற்கு போதுமான பெரும்பான்மையை இழந்த பிரதமர் தெரசா மே ராணி எலிசபத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று வந்தது. இதில், பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.
மொத்தமுள்ள 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் தொழிற்கட்சிகள் போட்டியிட்டன. வாக்குப் பதிவு முடிந்த உடனேயே, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 649 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 261 இடங்களை பிடித்துள்ளது. இன்னும் ஒரு சில இடத்தின் முடிவுகள் தான் மீதமுள்ளது. இதனால், கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு தேவையான மெஜாரிட்டையை இழந்துள்ளது. அங்கு ஆட்சி அமைக்கும் கட்சி குறைந்தபட்சம் 326 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.
இதனால், புதிய அரசை அமைப்பதற்கு பிரதமர் தெரசா மே இதர கட்சிகளின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பிரிட்டனில் தொங்கு நாடளுமன்றம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது.
எஸ்என்பி கட்சி 35 இடங்களை பிடித்துள்ளன. இதர கட்சிகள் 35 இடங்களை பிடித்துள்ளன. இதனிடையே டெமகரட்டிக் யூனியனிஸ்ட் கட்சியை சேர்ந்த 10 எம்.பி.க்களின் ஆதரவை கோரியுள்ளார் தெரசா மே. எனினும், பிரிட்டனில் அரசு அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் அந்நாட்டின் ராணி எலிசபத்திடம் முன் அனுமதி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.
இந்நிலையில் பிரதமர் தெரசா மே இன்று பக்கிங்காம் அரண்மனைக்கு சென்று ராணி எலிசபத்தை சந்தித்தார். டெமகரட்டிக் யூனியனிஸ்ட் கட்சியை சேர்ந்த 10 எம்.பி.க்கள் ஆதரவளித்துள்ள கடிதத்தை ராணியிடம் அவர் அளித்தார். இதையடுத்து, அங்கு புதிய கூட்டணி அரசுக்கு தலைமையேற்க பிரதமர் தெரசா மேவுக்கு ராணி எலிசபத் அனுமதி அளித்துள்ளார்.