“குடுத்த வாக்கை காப்பாத்த முடியல போலீஸ்கார்..” பேஸ்புக்கில் மன்னிப்பு கேட்ட குசும்புக்கார திருடன்!
அமெரிக்காவில் திருடன் ஒருவன் பேஸ்புக்கில் பதிவு போட்டு சரணடைந்துள்ளான்.
சென்னை: அமெரிக்காவில் திருடன் ஒருவன் தன்னுடையே தேடப்படும் போஸ்டரில் கமெண்ட் போட்டு சரணடைந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ரிச்லேன்ட் காவல்துறையினர் சமீபத்தில் தங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் அந்தோனி ஆக்கர் எனும் திருடனின் போட்டோவை பதிவிட்டு, அதில் தேடப்படும் குற்றிவாளி என குறிப்பிட்டிருந்தனர். இதன்மூலம் அந்த நபர் குறித்து யாராவது தகவல் தெரிவிப்பர் என போலீசார் எதிர்பார்த்தனர்.
ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக சம்மந்தப்பட்ட திருடனே அந்த பதிவில் தன்னை பற்றிய தகவல் வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினான். அதாவது தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், தானாகவே வந்து சரணடைவதாகவும் அவன் தெரிவித்திருந்தான்.
ஆனால் உறுதியளித்தப்படி அந்தோனி போலீசாரிடம் சரணடையவில்லை. இதையடுத்து, போலீசார் ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டனர். அதில், "ஏய் அந்தோனி, உறுதியளித்தபடி நீ வரவில்லை. எங்களுடைய வேலை நேரம் காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை. உன்னால் வர முடியவில்லை என்றால் எங்களுக்கு தகவல் சொல், நாங்களே வந்து அழைத்துக்கொள்கிறோம்", என கூறியிருந்தனர்.
இதற்கு பதில் அளித்த அந்தோனி, "மிக்க நன்றி. கடந்த ஒரு மாதமாக மிகவும் பிஸியாக இருக்கிறேன். இன்னும் 48 மணி நேரத்தில் வந்து விடுகிறேன்", என தெரிவித்தான்.
ஆனால் இப்போதும் அந்தோனியால் சொன்னபடி சரணடைய முடியவில்லை. இதுகுறித்து வருத்தம் தெரிவித்து அவன் வெளியிட்ட பதிவில், " அன்புக்குரிய காவல்துறைக்கு, இது என்னுடைய தவறு தான். எனக்கு நிறைய கமிட்மெண்ட்டுகள் இருப்பதால், சொன்னபடி என்னால் சரணடையமுடியவில்லை. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாளை மதியம் உணவு நேரத்திற்குள் நான் அங்கு இருப்பேன். இதை நீங்கள் நம்பமாட்டீர்கள் என தெரியும். அதுவும் சரி தான். ஏனென்றால் முன்பு நான் கூறிய வார்த்தையை காப்பாற்றவில்லை. நாளை நான் நிச்சயம் வந்துவிடுவேன்", என குறிப்பிட்டிருந்தான்.
இதையடுத்து, சொன்னபடி மறுநாள் மதியம் அந்தோனி காவல் நிலையத்தில் சரணடைந்தான். அதை போட்டோ எடுத்து பேஸ்புக்கிலும் பதிவிட்டான். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.